search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் திண்டுக்கல்-திருச்சி அணிகள் மோதல்
    X

    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் திண்டுக்கல்-திருச்சி அணிகள் மோதல்

    8 அணிகள் இடையிலான டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. நெல்லையில் நடக்கும் முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் -திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. #TNPL2018 #NammaOoruNammaGethu
    சென்னை:

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ‘டி.என்.பி.எல்.’ என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. நகரத்தை சேர்ந்த வீரர்கள் மட்டுமின்றி கிராமப்புறத்தில் உள்ள திறமையான வீரர்களையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு நல்லதொரு அடித்தளம் அமைத்து கொடுக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதன் அறிமுக போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும், 2-வது சீசனில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.

    இந்த நிலையில் 3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லையில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. ஆகஸ்டு 12-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டி நெல்லை சங்கர் நகர் இந்தியா சிமெண்ட்ஸ் மைதானம், திண்டுக்கல் அடுத்துள்ள நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானம், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் ஆகிய 3 இடங்களில் நடக்கிறது.

    கடந்த சீசனுடன் ஒப்பிடும் போது, காரைக்குடி, மதுரை, தூத்துக்குடி ஆகிய அணிகளின் உரிமையாளர்கள் மாறி இருக்கிறார்கள். இதே போல் திருவள்ளூர் வீரன்ஸ் அணி, காஞ்சி வீரன்ஸ் என்று பெயரை மாற்றி இருக்கிறது.

    இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி வாரியர்ஸ், காஞ்சி வீரன்ஸ், கோவை கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    மொத்தம் 32 ஆட்டங்கள் நடக்கிறது. நெல்லை மற்றும் திண்டுக்கல்லில் தலா 14 ஆட்டங்களும், சென்னையில் 4 ஆட்டங்களும் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 2 லீக் ஆட்டங்களும் (பிற்பகல் 3.15, இரவு 7.15 மணி), மற்ற நாட்களில் ஒரு லீக் ஆட்டமும் (இரவு 7.15 மணி) நடைபெறும். முதல் தகுதி சுற்று ஆட்டம் நெல்லையிலும், வெளியேற்றுதல் சுற்று மற்றும் 2-வது தகுதி சுற்று ஆட்டம் திண்டுக்கல்லிலும், இறுதிப்போட்டி சென்னையிலும் நடத்தப்படுகிறது.

    இந்த ஆண்டு பெரும்பாலான வீரர்கள் அணி மாறி இருக்கிறார்கள். அதனால் எந்த அணி வலுவானது என்பதை இப்போதே கணிக்க முடியாது. ஒவ்வொரு அணியிலும் முதல்முறையாக வெளிமாநில வீரர்கள் 2 பேர் விளையாட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அனுமதி அளித்து இருந்தது. ஆனால் இதற்கு இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டியினர் ஆட்சேபனை தெரிவித்து இருந்தனர். இந்த விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

    இங்கிலாந்து தொடரில் இடம் பெற்று இருந்த ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக தாயகம் திரும்பிவிட்டார். தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கும் அவர் முதல் சில ஆட்டங்களில் ஆடுவது சந்தேகம் தான். திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனும், இந்திய முன்னணி சுழற்பந்து வீச்சாளருமான அஸ்வின், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பு வரை டி.என்.பி.எல். தொடரில் நீடிப்பார்.

    காரைக்குடி காளை அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் இப்போது இந்திய அணியுடன் இங்கிலாந்தில் இருக்கிறார். இதனால் அவரும் தொடக்க கட்ட ஆட்டங்களில் விளையாட முடியாது. டெஸ்ட் அணியிலும் சேர்க்கப்பட்டால் அவர் டி.என்.பி.எல். போட்டியை முழுமையாக தவற விடுவார்.

    டி.என்.பி.எல். போட்டியின் தொடக்க விழா நெல்லை சங்கர் நகர் இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் இன்று மாலை 6.10 மணிக்கு கோலாகலமாக தொடங்குகிறது. சூப்பர் சிங்கர் குழுவினரின் இசை நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளின் கேப்டன்களும் உறுதிமொழி எடுப்பதுடன், பேட்டில் கையெழுத்திடுகின்றனர்.

    தொடக்க விழா முடிந்ததும் இரவு 7.15 மணிக்கு தொடங்கும் முதலாவது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-1 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    இன்றைய போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

    திண்டுக்கல் டிராகன்ஸ்: ஆர்.அஸ்வின் (கேப்டன்), என்.ஜெகதீசன், ஆர்.விவேக், சதுர்வேத், ஹரி நிஷாந்த், அனிருத் சீதாராம், முகமது, ஆர்.ரோகித், ஆதித்யா அருண், அபினவ், சிலம்பரசன், திரிலோக் நாத், யாழ் அருண்மொழி, சுஜேந்திரன், கவுசிக், ராமகிருஷ்ணன், அரவிந்த், நிவேதன் ராதாகிருஷ்ணன், வருண் தோத்தாரி.

    திருச்சி வாரியர்ஸ்: பாபா இந்த்ராஜித் (கேப்டன்), பரத் சங்கர், கே.விக்னேஷ், சஞ்சய், சோனு யாதவ், எம்.விஜய் கணபதி சந்திரசேகர், எஸ்.சுரேஷ்குமார், வசந்த் சரவணன், அரவிந்த், லட்சுமி நாராயணன், எல்.விக்னேஷ், சந்திரசேகர், மணிபாரதி, அஸ்வின் கிறிஸ்ட், சரவணகுமார், கோவிந்தராஜன், திலக், வி.ஆகாஷ்.

    தொடக்க ஆட்டத்தில் விஜயின் அதிரடி பேட்டிங் மற்றும் அஸ்வினின் சுழல் தாக்குதலுக்கு இடையிலான மோதல் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. #TNPL2018 #NammaOoruNammaGethu
    Next Story
    ×