search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள கன்னியாஸ்திரிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கு - ஜூன் 7-ம் தேதி மறுவிசாரணை ஒத்திவைப்பு
    X

    கேரள கன்னியாஸ்திரிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கு - ஜூன் 7-ம் தேதி மறுவிசாரணை ஒத்திவைப்பு

    கேரளா மாநிலத்தில் கன்னியாஸ்திரிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாதிரியார் பிராங்கோ முல்லக்கல் இன்று கோர்ட்டில் ஆஜரானார். மறுவிசாரணை ஜூன் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #KeralaNun #FrancoMulakkal
    திருவனந்தபுரம்:

    பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பி‌ஷப்பாக இருந்தவர் பிராங்கோ. இவரது கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த கேரள மாநிலம் கோட்டயம் குரு விலங்காடு கன்னியாஸ்திரிகள் மடத்தை சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி தன்னை பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் மிரட்டி கற்பழித்து விட்டதாக பரபரப்பு புகார் கூறினார். 

    மேலும் பிராங்கோவை கைது செய்ய கோரி அந்த மடத்தை சேர்ந்த கன்னியாஸ்திரிகளும் போராட்டத்தில் குதித்தனர். இதைத்தொடர்ந்து பி‌ஷப் பிராங்கோ கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

    24 நாள் சிறைவாசத்திற்கு பிறகு பிராங்கோ ஜாமீனில் வெளியே வந்தார். அவர் மீதான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதில் போலீசார் தாமதம் செய்வதாக கூறி மீண்டும் கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



    இந்த நிலையில் பி‌ஷப் பிராங்கோ மீது கோட்டயத்தில் உள்ள பாலா முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கடந்த மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 1400 பக்கம் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் 83 சாட்சியங்களும் இணைக்கப்பட்டுள்ளது.

    குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிராங்கோ முல்லக்கல்லுக்கு எதிராக கேரள போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மற்றும் இதர ஆவணங்களின் நகல்கள் வழங்கப்பட்டன.

    பின்னர், இவ்வழக்கின் மறுவிசாரணையை ஜூன் 7-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக மாஜிஸ்திரேட் குறிப்பிட்டார்.

    இயற்கைக்கு மாறான உறவு, சிறை வைத்து மிரட்டல் உள்பட 5 பிரிவுகளில் பிராங்கோ மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் பிராங்கோவுக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.  #KeralaNun #FrancoMulakkal  
    Next Story
    ×