search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அயோத்தி பிரச்சனையை சுமுகமாக தீர்க்க நடுநிலையாளரை நியமிக்கலாம்- உச்ச நீதிமன்றம் யோசனை
    X

    அயோத்தி பிரச்சனையை சுமுகமாக தீர்க்க நடுநிலையாளரை நியமிக்கலாம்- உச்ச நீதிமன்றம் யோசனை

    அயோத்தி பிரச்சனையை சுமுகமாக தீர்க்க நடுநிலையாளர்களை நியமிக்கலாமா? என்பது குறித்து மார்ச் 5ம் தேதி உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. #AyodhyaCase #SC
    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மனுதாரர்கள் சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் பிரித்துக்கொள்ள வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. ஆனால் இதை எதிர்த்து 3 பிரிவினரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மொத்தம் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்தது. பின்னர் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

    இந்நிலையில், இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்தே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் துவங்கியது.



    அப்போது, அயோத்தி விவகாரத்தை நிலப்பிரச்சனையாக பார்க்கவில்லை, மத நம்பிக்கை சார்ந்த விஷயமாக பார்க்கிறோம் எனவும் இரண்டு மதங்கள் இடையே உள்ள பிரச்சனையை சுமுகமாக தீர்க்கவே முயற்சிக்கிறோம் என நீதிபதிகள் கூறினர். மேலும், அயோத்தி பிரச்சனையை சுமூகமாக தீர்க்க நடுநிலையாளரை நியமிக்கலாம் என்று யோசனை தெரிவித்த நீதிபதிகள், நடுநிலையாளரை நியமிக்கலாமா? என்பது குறித்து மார்ச் 5-ல் உத்தரவு பிறப்பிப்பதாகவும் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

    மேலும், 6 வார காலத்திற்குள் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மொழிமாற்றம் செய்து வழங்க வேண்டும் என்று பதிவாளரை கேட்டுக்கொண்ட நீதிபதிகள், வழக்கின் முக்கிய விஷயம் எட்டு வாரங்களுக்கு பிறகு விசாரிக்கப்படும் என தெரிவித்தனர். அதேபோல், மனுதாரர்கள் எட்டு வாரத்திற்குள் மொழிமாற்றம் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து, ஆட்சேபம் இருந்தால் தெரிவித்துவிட வேண்டும் எனவும் கூறினர்.

    இவ்வழக்கில் நடுநிலையாளரை நியமிக்கும் யோசனையை சில முஸ்லிம் அமைப்புகள் ஏற்றுக்கொண்டன. ராம் லல்லா போன்ற சில இந்து அமைப்புகள் ஆட்சேபனை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. #AyodhyaCase #SC
    Next Story
    ×