search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரண்டாம் நாள் பயணத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வந்த சோதனை
    X

    இரண்டாம் நாள் பயணத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வந்த சோதனை

    பிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட ‘வந்தே பாரத்’ அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் தனது பயணத்தின் இரண்டாவது நாளான இன்று சிறிய கோளாறால் தாமதமாக டெல்லி வந்து சேர்ந்தது. #EnginelessTrain #VandeBharatExpress
    புதுடெல்லி:

    மணிக்கு 180 கிலோமீட்டர் வேகம் வரை செல்லக்கூடிய அதிவேக மின்சார ரெயிலை சென்னை ஐ.சி.எப். இணைப்புப் பெட்டி தொழிற்சாலை சமீபத்தில் தயாரித்தது.

    டெல்லி-வாரணாசி வழித்தடத்தில் ஓடும் இந்த அதிநவீன ரெயிலுக்கு ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரெயிலின் சேவையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். டெல்லியில் இருந்து நேற்று காலை வாரணாசி நோக்கி புறப்பட்டு சென்ற ரெயில் நேற்றிரவு 10.30 மணியளவில் வாரணாசியில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்டது.

    இன்று காலை 6.30 மணியளவில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள துன்ட்லா சந்திப்பு வழியாக வந்தபோது ‘பிரேக்’ சரியாக பிடிக்காமல் சக்கரங்கள் வழுக்கிச் செல்வதை உணர்ந்த ரெயிலின் டிரைவர் வேகத்தை குறைத்து ரெயிலை அங்கே நிறுத்தினார். பின்னர் சுமார் ஒருமணி நேரம் பழுது பார்க்கும் பணி முடிந்து அங்கிருந்து ரெயில் புறப்பட்டது.

    இந்த ரெயிலின் முதல் வெள்ளோட்டத்தை ரசிப்பதற்காக ஏராளமான பத்திரிகை நிருபர்களும், செய்தியாளர்களும் அதில் பயணித்தனர். சரியாக பிரேக் பிடிக்காதபோது அந்த ரெயிலின் முதல் மற்றும் கடைசி பெட்டிகளில் இருந்து அதிர்வதைப்போன்ற சப்தம் கேட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

    கடைசி 4 பெட்டிகளில் சிறிய புகையுடன் ஏதோ தீய்ந்ததுபோல் வாசனை வந்ததாகவும், மின்சாரம் தடைபட்டதாகவும் கூறப்படுகிறது.

    பின்னர் 8.15 மணியளவில் ரெயில் அங்கிருந்து புறப்பட்டது. பிரேக் சரியாக இயங்காததால் ஆரம்பத்தில் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்திலும், பின்னர் படிப்படியாக அதிகரித்து சுமார் 40 கிலோமீட்டர் வேகத்திலும் ரெயில் செல்ல தொடங்கியது.

    இதற்கிடையே, அதில் இருந்த பத்திரிகையாளர்கள் அவ்வழியாக சென்ற மற்றொரு ரெயிலில் டெல்லிக்கு ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.



    காலை சுமார் 8.55 மணியளவில் மீண்டும் ‘பிரேக்’ பிரச்சனை ஏற்பட்டு சரிபார்ப்பு பணி முடிந்து ‘வந்தே பாரத்’ ஒருவழியாக இன்று பிற்பகல் ஒருமணியளவில் டெல்லி வந்து சேர்ந்தது.

    இருட்டில் ரெயில் செல்லும்போது தண்டவாளத்தின் குறுக்கே ஓடும் கால்நடைகள் அடிபட்டு சாவதுண்டு. அப்படி நேற்றிரவு சில கால்நடைகள் அடிபட்டு, அவற்றின் மாமிசம் அல்லது ரத்தம் ரெயில் சக்கரங்களில் ஒட்டியிருந்தால் பிரேக் பிடிக்காமல் சக்கரங்கள் வழுக்கிச்செல்ல வாய்ப்புண்டு என்று ரெயில்வே அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.

    இதுதொடர்பான செய்தி வெளியானதும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் பதிவாகியுள்ளது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், ‘மோடி அரசின் செயல்திறனுக்கு இந்த ரெயில் மிகச்சிறந்த உதாரணம்’ என தெரிவித்துள்ளார்.

    நாளை (ஞாயிறு) முதல் வர்த்தகரீதியான போக்குவரத்தை தொடங்கும் ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயிலில் சுமார் ஒருவாரம் வரை முன்பதிவு நிறைவடைந்து ஆயிரக்கணக்கான பயணிகள் உற்சாகமான பயணத்துக்காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது. #EnginelessTrain #VandeBharatExpress
    Next Story
    ×