search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் ஹோட்டல் ஒன்றில் பயங்கர தீவிபத்து - 17 பேர் பலி
    X

    டெல்லியில் ஹோட்டல் ஒன்றில் பயங்கர தீவிபத்து - 17 பேர் பலி

    டெல்லியில் செயல்பட்டு வரும் ஆர்பிட் பேலஸ் என்ற நட்சத்திர ஹோட்டலில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். #DelhiHotelFire #HotelArpitPalace
    புதுடெல்லி:

    டெல்லியில் பரபரப்பான கரோல்பாக் பகுதியில் ஓட்டல் ஆர்பிட் பேலஸ் என்ற நட்சத்திர ஓட்டல் உள்ளது. இன்று அதிகாலை 4.30 மணி அளவில் ஓட்டலின் 5-வது மாடியில் தீப்பிடித்தது சில நிமிடங்களில் தீ மளமளவென்று மற்ற இடங்களுக்கும் பரவியது.

    இதைப்பார்த்த ஓட்டல் ஊழியர்கள் உடனே தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவித்தனர். 26-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ஓட்டலின் உள்ளே சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர். 35 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். தீப்பிடித்த மேல் தளத்தில் பலர் தங்கி இருந்தனர். அவர்கள் தப்பமுடியாமல் சிக்கிக்கொண்டனர். அவர்களில் 9 பேர் தீயில் சிக்கி கருகி பலியானார்கள்.

    அந்த தளத்தில் இருந்த 10 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு ராம் மனோகர் லோகியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களது நிலை கவலைக்கிடமாக இருந்தது. அவர்களில் 8 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 17 ஆக அதிகரித்தது.


    தீயணைப்பு படையினர் 2.30 மணி நேரம் போராடி காலை 7 மணிக்கு தீயை கட்டுப்படுத்தினார்கள். தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தீ விபத்தை தொடர்ந்து அந்தப்பகுதியில் அருகில் உள்ள கட்டிடங்களில் வசிக்கும் மக்கள் முன் எச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டனர். #DelhiHotelFire #HotelArpitPalace
    Next Story
    ×