search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜ.க.வில் இருந்து என்னை நீக்கினால் கவலை இல்லை - மம்தா கூட்டத்தில் சத்ருகன் சின்ஹா ஆவேசம்
    X

    பா.ஜ.க.வில் இருந்து என்னை நீக்கினால் கவலை இல்லை - மம்தா கூட்டத்தில் சத்ருகன் சின்ஹா ஆவேசம்

    கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பா.ஜ.க. எம்.பி. சத்ருகன் சின்ஹா தன்னை கட்சியில் நீக்கினால் கவலை இல்லை என தெரிவித்தார். #ShatrughanSinha #MamataBanerjee
    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பயிற்சி திடலில் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் 22 எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் பா.ஜ.க.வில் உள்ள மோடி அதிருப்தியாளர்களான வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் முன்னாள் நிதி மந்திரியாக பணியாற்றிய யஷ்வந்த் சின்ஹா, முன்னாள் சுகாதாரத்துறை மந்திரியாக பணியாற்றிய சத்ருகன் சின்ஹா ஆகியோர் பங்கேற்று பேசினர்.

    இந்த கூட்டத்தில் பேசிய சத்ருகன் சின்ஹா கூறியதாவது:-

    நான் பாரதிய ஜனதா கட்சியில் தான் இருக்கிறேன். ஆனால், எல்லாவற்றுக்கும் மேலாக பாரதத்தின் ஜனநாயகத்துக்காக இங்கு வந்திருக்கிறேன்.

    மத்தியில் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கான அரசு அமைந்திருந்தது. தற்போது சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. ரபேல் போர் விமான கொள்முதல் விவகாரத்தில் நீங்கள் உண்மையை மறைக்க இந்த நாட்டின் காவலாளி திருடனாக மாறிவிட்டதாகதான் மக்கள் பேசுவார்கள்.



    நான் சித்தாந்தங்களுடன் சமரசம் செய்துகொள்ளாவிட்டாலும், உண்மையின் பக்கம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

    இங்கு வந்துள்ள எனது மூத்த சகோதரர் யஷ்வந்த் சின்ஹா, இந்த கூட்டத்தில் பங்கேற்றதற்காக என்னை நிச்சயமாக பா.ஜ.க.வில் இருந்து நீக்கி விடுவார்கள் என்று குறிப்பிட்டார். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை என்று நான் அவரிடம் தெரிவித்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி.முறை வரிவிதிப்பு போன்றவற்றை சத்ருகன் சின்ஹா தொடர்ந்து எதிர்த்தும், வெளிப்படையாக கருத்து தெரிவித்தும் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #ShatrughanSinha 
    Next Story
    ×