search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்
    X
    பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்

    கன்னியாஸ்திரிக்கு பாலியல் தொல்லை - ஜலந்தர் பி‌ஷப் போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார்

    கேரளாவில் கன்னியாஸ்திரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜலந்தர் பிராங்கோ முல்லக்கல் இன்று போலீசார் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார். #JalandharBishop #FrancoMulakkal
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பி‌ஷப்பாக இருக்கும் பிராங்கோ முல்லக்கல் (வயது 54) என்பவர் மீது பாலியல் புகார் கூறி உள்ளார்.

    இதுபற்றி அவர் குருவிலங்காடு போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தார். அந்த புகாரில் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து 2016-ம் ஆண்டு வரை பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் தன்னை மிரட்டி 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டி உள்ளார்.

    தன் மீதான பாலியல் புகாரை பிராங்கோ முல்லக்கல் மறுத்தார். புகார் கூறிய கன்னியாஸ்திரிக்கு அவர் கேட்ட சலுகைகளை தான் செய்து கொடுக்காததால் தன்னை மிரட்டுவதற்காக பொய் புகார் கூறி உள்ளதாக தெரிவித்தார்.

    கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்ததால் கோட்டயம் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினார்கள். பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு இன்று (19-ந்தேதி) நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பினார்கள். இதை ஏற்றுக்கொண்ட பி‌ஷப் தனது பொறுப்புகளை மூத்த பாதிரியார் ஒருவரிடம் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணைக்கு ஆஜராக நேற்றே அவர் கேரளா வந்து விட்டதாகவும் தெரிகிறது.

    இந்த நிலையில் பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் இன்று காலை வைக்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜராவார் என்று தெரிகிறது. இதையொட்டி அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ராவும் கோட்டயத்தில் முகாமிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக கோட்டயம் போலீஸ் சூப்பிரண்டு ஹரிசங்கர் கூறும்போது பி‌ஷப்பிடம் விசாரணை நடத்திய பிறகுதான் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும் என்றார். இன்றைய விசாரணையின் போது பி‌ஷப்பிடம் கேட்க வேண்டிய கேள்விகள் பற்றி போலீசார் கொச்சி சரக ஐ.ஜி. விஜய்சகோராவிடமும் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

    இதற்கிடையில் பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் சார்பில் நேற்று கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி வருகிற 25-ந்தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார். ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு விசாரணை தள்ளி வைக்கப்பட்டு உள்ளதால் 25-ந்தேதி வரை பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்லை போலீசார் கைது செய்ய வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

    பி‌ஷப்பை கைது செய்ய கோரி கொச்சியில் நடைபெறும் தொடர் போராட்டம் இன்று 13-வது நாளை எட்டி உள்ளது. இந்த போராட்டத்தில் 5 கன்னியாஸ்திரிகளும் பங்கேற்று வருகிறார்கள். பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் சகோதரியும் 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நாளுக்கு நாள் இந்த போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. பி‌ஷப்பை கைது செய்யும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று அவர்கள் அறிவித்து உள்ளனர்.

    இன்று போராட்டம் நடைபெறும் இடத்திலும் அதிகளவு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.   #JalandharBishop #FrancoMulakkal
    Next Story
    ×