search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர் எல்லையில் தொடரும் அத்துமீறல்: பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் குழந்தை பலி - 6 பேர் காயம்
    X

    காஷ்மீர் எல்லையில் தொடரும் அத்துமீறல்: பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் குழந்தை பலி - 6 பேர் காயம்

    காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் குழந்தை பலியானது. போலீஸ் அதிகாரி உள்பட 6 பேர் காயம் அடைந்தனர். #JammuKashmir #Pakistan #India
    ஜம்மு:

    காஷ்மீரில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அமலில் இருக்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.

    கடந்த ஒரு வார காலமாக பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகிறது. இப்படி கடந்த 15-ந் தேதி முதல் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் 2 பேர், பொதுமக்களில் 4 பேர் உயிர் இழந்து உள்ளனர்.

    மேலும் 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்திருக்கிறார்கள்.

    இதற்கு பதிலடி தரும் விதமாக இந்திய எல்லை பாதுகாப்புபடை வீரர்கள் நேற்று முன்தினம் பாகிஸ்தானின் எல்லைக்கு அப்பால் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியும், பீரங்கி குண்டுகளை வீசியும் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதனால் நிலைகுலைந்துபோன பாகிஸ்தான் ராணுவம், தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.



    இதையடுத்து தாக்குதலை உடனடியாக நிறுத்தும்படி இந்திய எல்லை பாதுகாப்புபடை அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தது. அதன்படி இரு தரப்பிலும் தாக்குதல் நிறுத்தப்பட்டது.

    ஆனாலும், நேற்று முன்தினம் இரவு சம்பா மாவட்டத்தில் உள்ள ராம்கர் செக்டர் பகுதியை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறிய தாக்குதலை நடத்தியது. அதற்கு இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.

    இந்நிலையில், நேற்று அதிகாலை ஜம்மு மாவட்டத்தில் சர்வதேச எல்லையையொட்டி உள்ள அர்னியா செக்டார் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் தாக்குதல் நடத்தினர். சிறிய ரக பீரங்கிகள் மற்றும் தானியங்கி ஆயுதங்களை கொண்டு அவர்கள் தாக்கினர்.

    அதனை தொடர்ந்து இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தங்களுடைய துப்பாக்கிகளால் அவர்களுக்கு பதிலடி கொடுத்தனர்.

    இருப்பினும் பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டதில் 62 வயதான மூதாட்டி மற்றும் சிறப்பு போலீஸ் அதிகாரி உள்பட 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்லன்வாலா செக்டாரில், பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில், வீட்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த 8 மாத ஆண் குழந்தை பலியானது.

    பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சர்வதேச எல்லை பகுதியில் இருந்து 5 கி.மீ தொலைவுக்குள் உள்ள பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன.

    இதற்கிடையில், டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனிடம், ‘ராணுவ ஒத்துழைப்பின் மூலம் இரு நாடுகளும் அமைதி மற்றும் வளத்தை பெற வேண்டும் என்பதே என்னுடைய ஆசை’ என பாகிஸ்தான் ராணுவ தளபதி காமர் ஜாவேத் பஜ்வா கூறியது பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், “அமைதியை வேண்டி அண்டை நாடு முன்வைக்கும் எந்த ஒரு பரிந்துரையையும் அரசு தீவிரமாக பரிசீலிக்கும்” என்றார்.  #JammuKashmir #Pakistan #India 
    Next Story
    ×