search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகா நம்பிக்கை வாக்கெடுப்பு- சட்டசபை வளாகத்தில் 2000 போலீஸ் குவிப்பு
    X

    கர்நாடகா நம்பிக்கை வாக்கெடுப்பு- சட்டசபை வளாகத்தில் 2000 போலீஸ் குவிப்பு

    நம்பிக்கை ஓட்டெடுப்பு நடப்பதை முன்னிட்டு கர்நாடகா சட்டசபையான விதான் சவுதா வளாகத்தில் சுமார் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #Karnataka #KarnatakaFloorTest #KarnatakaAssembly
    பெங்களூர்:

    நம்பிக்கை ஓட்டெடுப்பு நடப்பதை முன்னிட்டு கர்நாடகா சட்டசபையான விதான் சவுதாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அம்மாநில டி.ஜி.பி.க்கு சுப்ரீம்கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கர்நாடகா போலீஸ் டி.ஜி.பி. நீல்மணி என்.ராஜு மூத்த போலீஸ் அதிகாரிகளுடன் சென்று விதான் சவுதா பகுதிகளை ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தார். அவர் உத்தரவின் பேரில் விதான் சவுதா வளாகத்தில் சுமார் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூன்று வளைய பாதுகாப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

    ஓட்டெடுப்பு நடக்கும் சமயத்தில் ஏதேனும் இடையூறு, பிரச்சனை ஏற்பட்டால் அதை சமாளிக்க பெங்களூர் மேற்கு பகுதி கூடுதல் போலீஸ் கமி‌ஷனர் பி.கே.சிங் தலைமையில் தனிப்படை தயாராக உள்ளது. அந்த படையில் 5 துணை போலீஸ் கமி‌ஷனர்கள், 20 உதவிக் கமி‌ஷனர்கள், 40 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் இடம் பெற்றுள்ளனர். ஓட்டெடுப்பு காரணமாக இன்று பொதுமக்கள் யாரும் விதான் சவுதாவுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

    இதற்கிடையே விதான் சவுதா பகுதியில் கட்சிக்காரர்கள் அத்துமீறி ஊர்வலம், போராட்டம் நடத்தி விடக்கூடாது என்பதில் போலீசார் உஷாராக உள்ளனர். அவற்றை தடுப்பதற்காக சட்டசபை பகுதியில் 144 தடை உத்தரவை பெங்களூர் போலீஸ் கமி‌ஷனர் சுனீல்குமார் பிறப்பித்துள்ளார். #Karnataka #KarnatakaFloorTest #KarnatakaAssembly
    Next Story
    ×