search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் - கலெக்டர் விஜயலட்சுமி தகவல்
    X

    அரியலூர் மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் - கலெக்டர் விஜயலட்சுமி தகவல்

    அரியலூர் மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

    அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பிற்கு ஏற்றவாறு பயிர் இழப்பீட்டு தொகை சம்பந்தப்பட்ட பயிர்காப்பீடு நிறுவனத்தால் வழங்கப்படும். நடப்பு 2019-ம் ஆண்டு குறுவை நெல் பயிர் மற்றும் இதர பயிர்களுக்கு காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி அரியலூர் மாவட்டத்தில், நெல்- குறுவைக்கு 74 வருவாய் கிராமங்களும், இதர காரீப் பருவ பயிர்களான மக்காச்சோளம் பயிருக்கு 73 வருவாய் கிராமங்களும், துவரை பயிருக்கு 5 வருவாய் கிராமங்களும், உளுந்து பயிருக்கு 82 வருவாய் கிராமங்களும், நிலக்கடலை பயிருக்கு 140 வருவாய் கிராமங் களும் மற்றும் தோட்டக்கலை பயிர்களான வாழை பயிருக்கு 8 வருவாய் கிராமங்களும், வெங்காயம் பயிருக்கு 9 வருவாய் கிராமங்களும், மரவள்ளி பயிருக்கு 9 வருவாய் கிராமங்களும், மஞ்சள் பயிருக்கு 1 வருவாய் கிராமமும் மற்றும் 15் குறுவட்டங்களிலும் அறிக்கை செய்யப் பட்டுள்ளன.

    இந்த திட்டத்தில் கடன் பெறும் விவசாயிகள் அவர்கள் கடன் பெரும் வங்கிகளில் கட்டாயமாகப் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யப்படுவார்கள். கடன் பெறாத விவசாயிகள் அரியலூர் மாவட்டத்தில் பயிர் காப்பீடுத் திட்டத்தை செயல்படுத்தும் காப்பீடு நிறுவனத்தின் அங்கீ கரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வணிக வங்கிகள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் குறுவை நெல் பயிரிடும் விவசாயிகள் பதிவு செய்ய ஜூலை மாதம் 31-ந் தேதி கடைசி நாள் ஆகும். இதர பயிர்களான உளுந்து, சோளம், கம்பு, எள், கடலை, மக்காச்சோளம் மற்றும் துவரை பயிரிடும் விவசாயிகள் பதிவு செய்ய ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

    தோட்டக்கலை பயிர் களான வாழை, வெங்காயம், மரவள்ளிக் கிழங்கு மற்றும் மஞ்சள் பயிரிடும் விவசாயிகள் பதிவு செய்ய செப்டம்பர் மாதம் 30-ந் தேதி கடைசி நாள் ஆகும். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் பயிர் சாகுபடி செய்ய இயலாத விவசாயிகள் முன்னதாகவே கிராம நிர்வாக அதிகாரியிடம் பயிர் செய்ய உள்ளதற்கான சான்று பெற்று விண்ணப்பிக்க வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்கு பின் பயிர் காப்பீடு செய்பவர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படமாட்டாது. மேலும், பயிர் வாரியாக அறிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற இயலும்.

    எனவே விவசாயிகள் இறுதி நேர நெரிசலை தவிர்க்கவும், விவசாயிகளின் விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், பிரதம மந்திரி பயிர்க் காப்பீடுத் திட்டத்தில் காப்பீட்டுத் தொகை செலுத்தி தங்களது பயிர்களை முன்கூட்டியே பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயிர் காப்பீடு செய்ய குறுவை நெல் பயிருக்கு பிரிமியத் தொகையாக ஒரு ஏக்கருக்கு ரூ.650-ம், உளுந்து பயிருக்கு ரூ.315-ம், சோளப்பயிருக்கு ரூ.206-ம், கம்புக்கு ரூ.182-ம், எள்ளுக்கு ரூ.260-ம், நிலக்கடலைக்கு ரூ.520-ம், மக்காச்சோளத்திற்கு ரூ.446-ம், துவரைக்கு ரூ.315-ம், வாழைக்கு ரூ.3,065-ம், வெங்காயத்திற்கு ரூ.1,710-ம், மரவள்ளிக்கிழங்குக்கு ரூ.1,388-ம் மற்றும் மஞ்சளுக்கு ரூ.3,175-ம் காப்பீடுக் கட்டணமாக செலுத்தினால் போதுமானது.

    அரியலூர் மாவட்ட விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பிரிமியத் தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதையும் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

    மேற்கண்ட திட்டங்கள் தொடர்பாக எழும் சந்தேகங் களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 
    Next Story
    ×