search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முல்லைப்பெரியாறு அணையில் மூவர் கண்காணிப்பு குழுவினர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது எடுத்த படம்.
    X
    முல்லைப்பெரியாறு அணையில் மூவர் கண்காணிப்பு குழுவினர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

    முல்லைப்பெரியாறு அணையில் மூவர் கண்காணிப்பு குழு ஆய்வு

    முல்லைப்பெரியாறு அணையில் 10 மாத இடைவெளிக்கு பிறகு மூவர் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது மதகை இயக்கி சோதனை நடத்தினர்.
    தேனி :

    தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது.

    இந்த அணையின் மொத்த உயரம் 152 அடி ஆகும். இதில் 142 அடி வரை தண்ணீரை தேக்கிக் கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

    நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் உத்தரவை நடைமுறைப்படுத்தி நீர்மட்டம் உயர்வதை கண்காணிக்கவும், அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்பார்வை செய்து தேவையான ஆலோசனை வழங்கவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கடந்த 2014-ம் ஆண்டு மூவர் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. மத்திய அரசு பிரதிநிதி தலைமையில், தமிழக மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து தலா ஒரு பிரதிநிதி என மொத்தம் 3 பேர் இந்த கண்காணிப்பு குழுவில் அங்கம் வகிக்கின்றனர். மூவர் கண்காணிப்பு குழுவினர் பருவமழைக் காலங்களில் அணையில் ஆய்வு செய்வது வழக்கம்.

    அதன்படி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 4-ந்தேதி மூவர் கண்காணிப்பு குழுவினர் அணையில் ஆய்வு செய்தனர். இதையடுத்து 10 மாத இடைவெளிக்கு பிறகு அணையில் இந்த குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வுக்காக கண்காணிப்பு குழு தலைவரான மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமை பொறியாளர் குல்சன்ராஜ், தமிழக பிரதிநிதியான பொதுப்பணித்துறை கூடுதல் அரசு முதன்மை செயலாளர் பிரபாகரன் மற்றும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஜீப்கள் மூலம் வல்லக்கடவு வழியாக அணைக்கு சென்றனர்.

    வல்லக்கடவு பாதையில் இருந்த தரைப்பாலம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பெய்த பலத்த மழையின் போது சேதம் அடைந்தது. அந்த பாலத்தில் தற்காலிகமாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அந்த பாதை வழியாக ஆய்வு செய்தபடி அவர்கள் வந்தனர். அதுபோல் கேரள மாநில பிரதிநிதியான கேரள நீர்ப்பாசனத்துறை செயலாளர் அசோக் மற்றும் கேரள நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் தேக்கடியில் இருந்து படகு மூலமாக அணைக்கு சென்றனர். பகல் 12 மணியளவில் அவர்கள் அணையில் ஆய்வை தொடங்கினர்.

    முல்லைப்பெரியாறு அணையை படத்தில் காணலாம்.

    முல்லைப்பெரியாறு அணை, பேபி அணை, அணையின் கேலரி எனப்படும் சுரங்கப் பகுதி, மதகுகள் ஆகியவற்றை பார்வையிட்டனர். முதலாவது மதகை இயக்கி சோதித்துப் பார்த்தனர். அது நல்ல நிலையில் இயங்குவது உறுதி செய்யப்பட்டது. சுரங்கப் பகுதியில் கசிவுநீர் அளவு கணக்கிடப்பட்டது. அது இயல்பான அளவிலேயே இருந்தது.அணையில் சுமார் 1 மணி நேரம் ஆய்வு செய்தனர். ஆய்வை முடித்துக் கொண்டு கண்காணிப்பு குழுவினர் படகுகள் மூலம் தேக்கடிக்கு வந்தனர்.

    இதைத்தொடர்ந்து குமுளி 1-ம் மைல் பகுதியில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மூவர் கண்காணிப்பு குழு தலைவர் குல்சன்ராஜ் தலைமை தாங்கினார். இதில் இருமாநில பிரதிநிதிகள், துணை கண்காணிப்பு குழுவினர், காவிரி தொழில் நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன் மற்றும் இருமாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இதுவரை அணை சம்பந்தமாக எழுந்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தை தொடர்ந்து, காவிரி தொழில் நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    முல்லைப்பெரியாறு அணையில் மூவர் கண்காணிப்பு குழு நடத்திய 18-வது ஆய்வு இதுவாகும். ஆய்வு கூட்டத்துக்கு கேரள வனத்துறை அதிகாரிகள் வந்து இருந்தனர். அவர்களிடம் அணைக்கு செல்லும் பாதையை சீரமைப்பது குறித்தும், அணைக்கு மின் இணைப்பு பெறுவது குறித்தும் கோரிக்கைகள் வைத்துள்ளோம். அணையில் இருந்து நீர்மட்ட நிலவரம், நீர்வரத்து, மழைப்பொழிவு போன்ற விவரங்களை இரு மாநில அதிகாரிகள் பரிமாறிக் கொள்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

    பேபி அணையை பலப்படுத்தும் பணி மேற்கொள்ள 23 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி பெற வேண்டும். சில வனச்சட்ட விதிகளை சுட்டிக்காட்டி கேரள வனத்துறை அனுமதி அளிக்க தொடர்ந்து மறுத்து வருகிறது. கேரளாவின் இந்த நிலைப்பாடு சரியானதாக இல்லை என்பதால்தான் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளோம். அணைக்கு அதிகாரிகள் ஆய்வுக்கு செல்வதற்கு வாங்கிய புதிய படகை இயக்குவது, மின் இணைப்பு பெறுவது, நீர்ப்பிடிப்பு பகுதியில் கேரள வனத்துறை சார்பில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்ட பிரச்சினை போன்றவை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இதற்கு முன்பு இரு மாநில அரசுகளும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. பேச்சுவார்த்தை எந்த அளவுக்கு பலனளிக்கும் என்பது கேள்விக்குறிதான். அதனால் தான் நீதிமன்றத்தை தமிழக அரசு நாடி இருக்கிறது. நிச்சயம் நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×