search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோபி அருகே பணத்தகராறில் வேன் டிரைவர் கத்தியால் குத்தி கொலை
    X

    கோபி அருகே பணத்தகராறில் வேன் டிரைவர் கத்தியால் குத்தி கொலை

    கோபி அருகே ரூ.1,800 பணத்தகராறில் வேன் டிரைவரை கத்தியால் குத்தி கொலை செய்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    கோபி:

    கோபி அருகே உள்ள உக்ரம்மில்மேடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது32). மினி வேன் டிரைவர். இவரது மனைவி இந்துமதி.

    இந்துமதியும் அவரது மாமியார் ராசாத்தியும் வீட்டின் முன்பு இட்லி கடை நடத்தி வருகிறார்கள். செந்தில்குமாரின் பக்கத்து வீட்டில் அவரது உறவினர் சின்னராஜ்(50) என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் சின்னராஜ் செலவுக்காக செந்தில்குமாரிடம் ரூ.1800 கடன் வாங்கி இருந்தார். பின்னர் செந்தில்குமார், சின்னராஜிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அதற்கு சின்னராஜ் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

    நேற்று மாலை 4 மணியளவில் செந்தில்குமார், சின்னராஜிடம் பணத்தை கேட்டுள்ளார். அதற்கு சின்னராஜ் பணத்தை கோவிலில் வைத்து விடுகிறேன். நீ போய் கோவிலில் எடுத்து கொள் என்றாராம். இதற்கு செந்தில்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் செந்தில்குமார் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இரவு 8.30 மணியளவில் செந்தில்குமார் வீட்டிற்கு சின்னராஜ், அவரது மனைவி பழனியம்மாள்(45), மகள் ரம்யா(22), மருமகன் பால்ராஜ்(25) ஆகியோர் வந்து பேசினார்கள். அப்போது அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரம் அடைந்த சின்னராஜ், பழனியம்மாள், ரம்யா, பால்ராஜ் ஆகியோர் கத்தியால் செந்தில்குமாரை மாறி மாறி குத்தியதாக கூறப்படுகிறது.

    இந்த எதிர்பாராத தாக்குதலில் படுகாயம் அடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். கொலை நடந்ததும் 4 பேரும் தலைமறைவாகி விட்டனர்.

    இது குறித்து கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செந்தில்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த கடத்தூர் போலீசார் தலைமறைவான சின்னராஜ், பழனியம்மாள், ரம்யா, பால்ராஜ் ஆகியோரை வலை வீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×