search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரமத்திவேலூரில் சப்-இன்ஸ்பெக்டர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
    X

    பரமத்திவேலூரில் சப்-இன்ஸ்பெக்டர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் சப்-இன்ஸ்பெக்டர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் பிரபு (வயது 39). இவருடைய மனைவி ஐஸ்வர்யா(29).

    இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகள், 3 வயதில் ஒரு மகன் உள்ளனர். மகள் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    பிரபு குடும்பத்துடன் நாமக்கல் மாவட்டம் மோகனூர், ஈ.பி.காலனியில் குடியிருந்து வருகிறார். தினமும் அவர் மோகனூரில் இருந்து பரமத்திவேலூருக்கு மோட்டார் சைக்கிளில் பணிக்கு செல்வார். பின்னர் பணி முடிந்ததும் இரவில் வீட்டிற்கு வருவது வழக்கம்.

    நேற்று காலையில் பிரபு வழக்கம்போல் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அப்போது தனியாக இருந்த ஐஸ்வர்யா வீட்டிற்குள் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மாலை 4 மணி ஆன பிறகும் அவர் வீட்டில் இருந்து வெளியே வராததால் அருகில் குடியிருக்கும் பொதுமக்கள் சந்தேகம் அடைந்து ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அங்கு ஐஸ்வர்யா தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக இது குறித்து மோகனூர் போலீசாருக்கும், பிரபுவுக்கும் தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஐஸ்வர்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஐஸ்வர்யாவின் பெற்றோர் சேலம், டால்மியா போர்டு வெள்ளக்கல்பட்டியில் வசித்து வருகிறார்கள். மகள் தற்கொலை செய்து கொண்டதை அறிந்ததும் அவரது தாய் சாந்தி கதறி அழுதார். அவர் தனது மகள் சாவு குறித்து மோகனூர் போலீசில் புகார் கொடுத்தார்.

    பிரபுவுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டதாகவும், அதன் காரணமாகத்தான் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

    இருப்பினும் போலீசார், இந்த குடும்ப பிரச்சனை எதற்காக ஏற்பட்டது? அல்லது அவர்களுக்குள் வேறு ஏதேனும் பிரச்சனை இருந்ததா? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×