
கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகே உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் அமைந்துள்ளன.
இவற்றை பார்வையிடுவதற்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் பொதிகை, குகன், விவேகானந்தா என 3 படகுகளை இயக்குகிறது. காலை 8 மணிக்கு தொடங்கும் படகு போக்குவரத்து மாலை 4 மணி வரை இடைவெளியின்றி நடைபெறும். தினந்தோறும் குவியும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் படகு மூலம் சென்று விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை பார்த்து வருகிறார்கள்.
கடந்த ஒரு ஆண்டில் மட்டும் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று 20 லட்சத்து 49 ஆயிரம் பேர் ரசித்துள்ளனர். அதிகபட்சமாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 2 லட்சத்து 80 ஆயிரம் சுற்றுலாபயணிகள் விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்றுள்ளனர்.
அதற்கு அடுத்து மே மாதம் 2 லட்சத்து 50 ஆயிரம் பேரும், கடந்த டிசம்பர் மாதம் 2 லட்சத்து 42 ஆயிரம் பேரும் சென்றுள்ளனர். குறைந்த பட்சமாக ஜூலை மாதத்தில் 97 ஆயிரம் பேர் மட்டும் படகில் சென்றுள்ளனர். மற்ற மாதங்களில் சராசரியாக ஒரு லட்சத்து 40 ஆயிரம் பார்த்துள்ளனர்.