search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திகிரி அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் குத்திக்கொலை - மகன் வெறிச்செயல்
    X

    மத்திகிரி அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் குத்திக்கொலை - மகன் வெறிச்செயல்

    மத்திகிரி அருகே குடும்ப தகராறில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரை மகன் கத்தியால் குத்திக்கொலை செய்தார். இந்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மத்திகிரி:

    மத்திகிரி அருகே குடும்ப தகராறில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரை மகன் கத்தியால் குத்திக்கொலை செய்தார். இந்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா மத்திகிரி அருகே உள்ள சின்னபேளகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் அனுமந்தப்பா (வயது 70). இவர் மத்திகிரி கால்நடை பண்ணையில் உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு 4 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இதில் 2-வது மகன் முனிராஜ் (46). தையல் தொழிலாளி. இவர் குடும்பத்துடன் ஓசூரில் வசித்து வருகிறார்.

    இந்தநிலையில் முனிராஜிக்கும், தந்தை அனுமந்தப்பாவுக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. நேற்று இரவு அனுமந்தப்பா சின்னபேளகொண்டப்பள்ளியில் உள்ள வீட்டில் இருந்தபோது முனிராஜ் அங்கு வந்து தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது.

    இதனால் ஆத்திரமடைந்த முனிராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தந்தை அனுமந்தப்பாவை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அனுமந்தப்பாவை உறவினர்கள் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அனுமந்தப்பா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் மத்திகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முனிராஜை வலைவீசி தேடி வருகின்றனர். குடும்ப தகராறில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரை அவரது மகனே கத்தியால் குத்திக்கொலை செய்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    Next Story
    ×