search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயிலம் அருகே ஆம்னி பஸ்சில் ரூ.2½ லட்சம் வெள்ளி நகைகள் கொள்ளை
    X

    மயிலம் அருகே ஆம்னி பஸ்சில் ரூ.2½ லட்சம் வெள்ளி நகைகள் கொள்ளை

    மயிலம் அருகே ஆம்னி பஸ்சில் ரூ.2½ லட்சம் வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
    மயிலம்:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினத்தை சேர்ந்தவர் அகமதுசுலைமான்(வயது 35). நகை வியாபாரி. இவர் நேற்று முன்தினம் சென்னைக்கு சென்று, அங்குள்ள ஒரு வியாபாரியிடம் வெள்ளி செயின், மோதிரம், கைசெயின் உள்ளிட்ட நகைகளை வாங்கினார். 3 கிலோ 479 கிராம் எடையுள்ள அந்த நகைகளை ஒரு பையில் வைத்துக்கொண்டு கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு சென்றார்.

    அங்கிருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்ட ஆம்னி பஸ்சில் அகமது சுலைமான் ஏறினார். வெள்ளி நகைகள் அடங்கிய அந்த பையை தனது இருக்கையில், கால் வைக்கும் பகுதியில் வைத்திருந்தார். அந்த ஆம்னி பஸ், விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே பாதிராப்புலியூர் என்ற இடத்தில் உள்ள ஓட்டலில் இரவு 9 மணிக்கு நிறுத்தப்பட்டது. அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சாப்பிட சென்றனர். அதன்படி அகமது சுலைமானும், பையை பஸ்சிலேயே வைத்துவிட்டு சாப்பிட சென்றார்.

    பின்னர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது, தான் வைத்திருந்த இடத்தில் அந்த பையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அகமதுசுலைமான், பஸ் முழுவதும் தேடிப்பார்த்தார். ஆனால் அந்த பை கிடைக்கவில்லை. அதனை ஆம்னி பஸ்சில் வந்த மர்மநபர்கள், கொள்ளையடித்துச்சென்றிருப்பது தெரியவந்தது. நகைகளின் மொத்த மதிப்பு ரூ.2½ லட்சம் ஆகும்.

    இது குறித்து அவர், மயிலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று முன்தினம் அந்த ஆம்னி பஸ்சில் பயணம் செய்தது யார்-யார்?, பாதிராப்புலியூரில் இருந்து டிராவல்ஸ் பஸ் புறப்பட்டபோது பயணம் செய்யாதவர்கள் யார்-யார்? என்ற பட்டியலை சேகரித்து, அதன்படி விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×