search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜபாளையம் பஸ் நிலையத்தில் நகைக்கடை ஊழியரிடம் ரூ.30 லட்சம் அபேஸ்- வாலிபர் கைது
    X

    ராஜபாளையம் பஸ் நிலையத்தில் நகைக்கடை ஊழியரிடம் ரூ.30 லட்சம் அபேஸ்- வாலிபர் கைது

    ராஜபாளையம் பஸ் நிலையத்தில் நகைக்கடை ஊழியரிடம் ரூ.30 லட்சம் பணப்பை அபேஸ் செய்த வாலிபரை பொதுமக்கள் கையும், களவுமாக மடக்கிப் பிடித்தனர்.
    ராஜபாளையம்:

    நெல்லை மாவட்டம், தென்காசி மெயின் ரோட்டில் உள்ள நகைக்கடையில் வேலை பார்ப்பவர் பாலசுப்பிரமணியன் (வயது 48). இவர் சென்னை சென்று நகை வாங்குவதற்காக கடையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டார்.

    இதற்காக ரூ.30 லட்சத்தை ஒரு பையில் எடுத்துக் கொண்டு அரசு பஸ்சில் புறப்பட்டார். தென்காசியில் இருந்து சென்னை செல்லும் அந்த பஸ், நள்ளிரவு 1.30 மணிக்கு ராஜபாளையம் புதிய பஸ் நிலையம் வந்தது.

    அங்கு பஸ் நின்றதும், பாலசுப்பிரமணியன் கீழே இறங்கினார். அப்போது பணப்பையை பஸ்சுக்குள்ளேயே வைத்திருந்தார்.

    சிறிது நேரத்தில் அந்தப்பையை ஒரு வாலிபர் நைசாக அபேஸ் செய்து விட்டு பஸ்சில் இருந்து இறங்கி உள்ளார்.

    இதனை கவனித்து விட்ட பாலசுப்பிரமணியன், திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். அதனைக் கேட்டதும் பணப்பையுடன் அந்த வாலிபர் அங்கிருந்து ஓட்டம் எடுத்தார்.

    ஆனால் அதற்குள் அங்கு நின்ற சக பயணிகள், வாலிபரை சுற்றி வளைத்தனர். பின்னர் அவரை பிடித்து பஸ் நிலைய புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    ராஜபாளையம் தெற்கு போலீசில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜாமணி அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினார். இதில் அவரது பெயர் சேக் முகமது (37) என்பதும் தென்காசி அருகே உள்ள இடைக்காலைச் சேர்ந்த அவர், அதே ஊரைச் சேர்ந்த ஹைதர் அலி (41) என்பவருடன் சேர்ந்து பணத்தை அபகரிக்க முயன்றதும் தெரியவந்தது.

    இதற்காக அவர்கள் 2 பேரும் பாலசுப்பிரமணியன் பயணம் செய்த பஸ்சில் அவரது அருகிலேயே இருந்து பயணித்துள்ளனர்.

    தகுந்த நேரம் பார்த்து பணப்பையை அபேஸ் செய்ய திட்டமிட்டு ராஜபாளையம் புதிய பஸ் நிலையத்தில் பாலசுப்பிரமணியன் கீழே இறங்கியதும் பணப்பையை எடுத்துள்ளனர்.

    ஆனால் எதிர்பாராத விதமாக சேக் முகமது பிடிபட்டு விட்டார். ஹைதர் அலி தப்பி ஓடிவிட்டார். அவரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். #tamilnews
    Next Story
    ×