search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை முறைகேடு குறித்து உயர்மட்ட விசாரணை- இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை
    X

    மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை முறைகேடு குறித்து உயர்மட்ட விசாரணை- இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை

    மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
    புதுச்சேரி:

    இந்திய மாணவர் சங்க தலைவர் ஜெயபிரகாஷ், செயலாளர் விண்ணரசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை காலப்பட்டில் இயங்கி வரும் பிம்ஸ் மருத்துவ கல்லூரி நிர்வாகம் நடப்பு கல்வி ஆண்டில் கூடுதலாக 50 இடங்களை நிரப்பி கொள்ளலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    பிம்ஸ் மருத்துவக்கல்லூரி கூடுதலாக பெற்ற 50 இடங்களுக்கு மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டிய பொறுப்பு புதுவை அரசின் சென்டாக் நிர்வாகத்தினுடையது.

    உயர்நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து மாநில சுகாதாரத்துறை சார்பில் இந்திய மருத்துவ கவுன்சில் கூடுதல் 50 இடங்களுக்கு அனுமதி வழங்கியது தொடர்பான தகவல் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. ஆகவே, கூடுதல் 50 இடங்களுக்கு 1 :10 என்ற தன்மையில் மாணவர்களின் தகுதி பட்டியல் வழங்க தேவை எழவில்லை என மாநில அரசு தன்பொறுப்பை தட்டிக்கழித்து கொண்டது.

    இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பிம்ஸ் மருத்துவக்கல்லூரி நிர்வாகம் 50 இடங்களையும் நிர்வாக ஒதுக்கீட்டில் நிரப்பி கொண்டது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் மாணவர் சேர்க்கையில் தவறு இருக்குமானால் முறையான மாணவர் சேர்க்கையை 7 நாட்களுக்குள் நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.

    புதுவை மாணவர்களுக்கு 17 மருத்துவ இடங்கள் ஒதுக்கப்படாமல் வஞ்சிக்கப்பட்டார்கள். ஏற்கனவே சேர்க்கப்பட்டிருந்த மாணவர்கள் தங்கள் கல்வி வாய்ப்பு பறிக்கப்படுமோ என்று அஞ்சினார்கள். இவ்வாறு ஒரு குழப்பமான சூழல் அரசு மற்றும் கல்லூரி நிர்வாகத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    இதில் மிகப்பெரும் முறைகேடு நடந்துள்ளதாக தெரிகிறது. இதில் பாதிக்கப்பட்டு உள்ள அப்பாவி மாணவர்களின் உயர்கல்வி தொடர மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வழிவகை செய்ய வேண்டும். மாணவர் சேர்க்கையில் நடந்த முறைகேடு குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அறிக்கையில் கூறியுள்ளனர். #tamilnews
    Next Story
    ×