search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர் அருகே 7 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரம்- வாலிபர் கைது
    X

    திருவாரூர் அருகே 7 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரம்- வாலிபர் கைது

    திருவாரூர் அருகே வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை அழைத்து சென்று பலாத்காரத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே உள்ள பிலவாடிமூலை பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவரின் 7 வயது மகள் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று மாலை நேரத்தில் வீட்டின் வாசலில் விளையாடி கொண்டிருந்தாள்.

    அப்போது இவர்களது வீட்டின் பக்கத்து வீட்டை சேர்ந்த தென்கோவன் (வயது 26). என்பவர் சிறுமியை நைசாக பேசி அவரது வீட்டின் மாடிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டின் வாசலில் விளையாடி கொண்டிருந்த மகளை காணாததால் சிறுமியின் தந்தை அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். பின்னர் தென்கோவன் வீட்டின் மாடிக்கு சென்று பார்த்தார்.

    அப்போது அவர் தனது மகளை பலாத்காரம் செய்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். சிறுமியின் தந்தை வந்ததை பார்த்ததும் தென்கோவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    உடனே சிறுமியின் தந்தை இது குறித்து திருவாரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி வழக்குபதிவு செய்தார்.

    பின்னர் தப்பி ஓடிய தென்கோவனை ‘‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.

    வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை அழைத்து சென்று பலாத்காரத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×