search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூரில் மின்சாரம் தாக்கி கணவர்- காண்டிராக்டர் கருகி பலி
    X

    திருவாரூரில் மின்சாரம் தாக்கி கணவர்- காண்டிராக்டர் கருகி பலி

    வீட்டின் மேற்கூரையை சீரமைத்த போது மின்சாரம் தாக்கி கணவர்- காண்டிராக்டர் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மனைவி படுகாயம் அடைந்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மருதப்பாடி பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 28). இவர் வீடுகளில் கீற்று கொட்டகை அமைக்கும் வேலை செய்து வந்தார்.

    இவரது வீட்டின் மேற்கூரை கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் சேதமடைந்தது. இதனால் மேற்கூரையை சீரமைக்கும் பணியில் நேற்று மாலை மாரிமுத்து ஈடுபட்டார். அப்போது அவர் அருகே உள்ள இரும்பினால் ஆன கொடி கம்பியை பிடித்தபோது மின்சாரம் தாக்கியது. உடனே மாரிமுத்து அலறினார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது மனைவி கனகா, மாரிமுத்துவை காப்பாற்ற முயன்றார். இதில் அவரையும் மின்சாரம் தாக்கியது.

    அந்த சமயத்தில் அவர்களின் வீட்டுக்கு வந்த திருவாரூர் புதுத்தெருவை சேர்ந்த பந்தல் காண்டிராக்டர் சுப்பிரமணியன்(52) உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாரிமுத்துவை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது.

    இதில் மாரிமுத்து, சுப்பிரமணியன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். கனகா உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவாரூர் டவுன் போலீசார் மாரிமுத்து, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த கனகாவை சம்பவ இடத்தில் இருந்து மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×