search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புயல் எச்சரிக்கை எதிரொலி: குமரி மாவட்ட மீனவர்கள் 4 பேர்ஆயிரம் கரை திரும்பினர்
    X

    புயல் எச்சரிக்கை எதிரொலி: குமரி மாவட்ட மீனவர்கள் 4 பேர்ஆயிரம் கரை திரும்பினர்

    புயல் எச்சரிக்கை காரணமாக இன்று காலை வரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பியுள்ளதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    நாகர்கோவில்:

    தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை சில நாட்களில் வலுவடைந்து. புயலாக மாறும் என வானிலை ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதன் காரணமாக குமரி கடல் மற்றும் கேரள கடல் பகுதியில் அதிவேகத்தில் காற்று வீசும் எனவும், மிக பலத்த மழை பெய்யும் எனவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. அப்போது கடல் சீற்றமாக இருக்கும் எனவும் கூறப்பட்டு உள்ளது. 7-ந்தேதி தமிழகம் முழுவதும் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.

    புயல் காரணமாக குமரி மாவட்ட மீனவர்கள் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். கடலுக்கு சென்ற மீனவர்கள் இன்று மாலைக்குள் கரை திரும்ப வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

    இதுதொடர்பாக மீனவ பிரதிநிதிகள் மூலம் கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டனர். குமரி மேற்கு மாவட்ட பகுதியான பூத்துறை, தூத்தூர், வள்ளவிளை, மார்த்தாண்டம் துறை, நீரோடி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடிப்பவர்கள். இதனால் அவர்கள் பக்கத்தில் உள்ள துறைமுகத்தில் கரை ஒதுங்குமாறும் எச்சரிக்கப்பட்டனர்.

    கன்னியாகுமரி சின்னமுட்டம், குளச்சல், முட்டம் பகுதியைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் நேற்று முதலே கரை திரும்பி வருகிறார்கள். ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் கர்நாடகா, குஜராத், கொச்சி, மும்பை துறைமுகங்களில் கரையே தொடங்கி உள்ளனர்.

    இன்று காலை வரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பியுள்ளதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வெளிமாநில துறைமுகங்களில் தஞ்சம் அடையும் குமரி மாவட்ட மீனவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்குமாறு இங்குள்ள மீன்வளத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட துறைமுக அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டுள்ளனர்.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்திலும், மீன் வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்திலும் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.

    வானிலை எச்சரிக்கை தகவல்களை கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 04652-231077, மீன் துறை உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் 04652-227460 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

    பூத்துறை, தூத்தூர், இரவிபுத்தன்துறை, வள்ளவிளை, மார்த்தாண்டம் துறை, நீரோடி மீனவ கிராமங்களில் ஊர் வாரியாக தனித்தனியாக வாட்ஸ்-அப் குழுக்கள் தொடங்கப்பட்டு அதன் மூலம் உடனுக்குடன் தகவல்கள் அளிக்கப்படுகிறது.

    எச்சரிக்கை காரணமாக குமரி மாவட்ட மீனவர்கள் யாரும் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதுகுறித்து நெய்தல் மக்கள் இயக்க மாவட்ட செயலாளர் பெர்லின் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் 80 சதவீதம் பேர் இன்று காலை வரை கரை திரும்பியுள்ளனர். மற்ற மீனவர்களும் கரை திரும்பி வருகிறார்கள். இன்று மதியத்துக்குள் அனைவரும் கரை திரும்பி விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

    கரை திரும்பிய மீனவர்கள் நடுக்கடலில் சீற்றம் அதிகமாக இருப்பதாக தெரிவித்தனர். எனவே கரையோர பகுதியில் உள்ள மீனவர்கள் தங்கள் வள்ளம், படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்த ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×