search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரிசோதனை முடிவு வராததால் மலேசிய மணல் விற்பனையில் தாமதம்
    X

    பரிசோதனை முடிவு வராததால் மலேசிய மணல் விற்பனையில் தாமதம்

    எண்ணூர் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மலேசிய மணலின் பரிசோதனை முடிவு வராததால் மணல் விற்பனை தாமதமாகி உள்ளது என்று அதிகாரி தெரிவித்தார்.
    சென்னை:

    தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாடு நிலவுவதால் வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.

    இதைத் தொடர்ந்து முதற் கட்டமாக மலேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு கப்பலில் 55 ஆயிரம் டன் மணல் கொண்டுவரப்பட்டது.

    ஒரு யூனிட் மணல் ரூ.9980-க்கு விற்பனை செய்யலாம் என்று விலை நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்த மணலை வாங்க நிறைய பேர் முன் வரவில்லை. இதனால் மணல் இன்னும் முழுமையாக விற்பனையாகவில்லை.

    இந்த நிலையில் கடந்த வாரம் எண்ணூர் துறைமுகத்துக்கும் மலேசியாசில் இருந்து கப்பலில் மணல் கொண்டுவரப்பட்டது. இந்த மணலை ஆன்லைன் மூலம் பதிவு செய்து பொதுமக்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் முன்பதிவு செய்ய முடியாத நிலைதான் காணப்படுகிறது.

    இதுகுறித்து பொதுப் பணித்துறை அதிகாரியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

    எண்ணூர் துறைமுகத்துக்கு வந்துள்ள மணலில் சிலிக்கான் கலப்படம் எதுவும் உண்டா? அது ஆற்று மணல்தானா? என்பதை கண்டறிய பரிசோதனை செய்வது வழக்கம். அந்த நடைமுறைக்காக மணல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவு வந்ததும் விற்பனை தொடங்கப்படும்.

    அனேகமாக இன்று அல்லது நாளை பரிசோதனை முடிவு வந்துவிட்டால் முன்பதிவை தொடங்கி வருகிற 1-ந்தேதியில் இருந்து மணல் விற்பனையை தொடங்கி விடுவார்கள். காலதாமதத்துக்கு இதுதான் காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×