search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிக்குன்குன்யாவால் பாதிப்பு - பிள்ளையார்குப்பம் கிராமத்தில் ஜிப்மர் மருத்துவ குழுவினர் முகாம்
    X

    சிக்குன்குன்யாவால் பாதிப்பு - பிள்ளையார்குப்பம் கிராமத்தில் ஜிப்மர் மருத்துவ குழுவினர் முகாம்

    சிக்குன்குன்யாவால் பாதிக்கப்பட்ட பிள்ளையார் குப்பம் கிராமத்தில் ஜிப்மர் மருத்துவ குழுவினர் இன்று முகாம் அமைத்து சிகிச்சை அளித்தனர்.
    பாகூர்:

    கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார்குப்பம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் 150-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் புதுவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.

    தொடர்ந்து மர்ம காய்ச்சல் பரவி வந்ததால் காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டது. இதில், பலருக்கு சிக்குன்குன்யா காய்ச்சல் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து சிக்குன் குன்யாவால் பாதிக்கப்பட்ட 26 பேர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று புதுவை அரசின் சுகாதாரத்துறையினர் பிள்ளையார் குப்பம் கிராமத்தில் முகாமிட்டு நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் ஜிப்மர் மருத்துவ குழுவினர் இன்று பிள்ளையார் குப்பம் கிராமத்தில் முகாமிட்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

    ஜிப்மர் மருத்துவ குழுவினருடன் புதுவை அரசின் சுகாதாரத்துறையினர் மற்றும் அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி டாக்டர்கள், நர்சுகள் என 100-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை மேற்கொண்டனர். இதனை அமைச்சர் கந்தசாமி, சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ராமன் ஆகியோர் பார்வையிட்டனர்.

    அப்போது கிராம மக்களிடம் வீடுகளில் தண்ணீர் தேங்காமல் பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றும், வீட்டு கழிவுநீர் வாய்க்கால்களை சுத்தம் செய்ய வேண்டும் என்றும், குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்றும் கிராம மக்களிடம் அறிவுறுத்தினர்.

    அப்போது பிள்ளையார் குப்பம் கிராம மக்கள் இந்த கிராமத்தில் தொடர்ந்து சிறப்பு மருத்துவ முகாம் செயல்படவும், அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

    அதற்கு அமைச்சர் கந்தசாமி ஆம்புலன்சுடன் சிறப்பு மருத்துவ முகாமை தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
    Next Story
    ×