search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகூரில் இந்திய கம்யூனிஸ்டு பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
    X

    பாகூரில் இந்திய கம்யூனிஸ்டு பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

    பாகூரில் கட்சி அலுவலகத்துக்குள் புகுந்து இந்திய கம்யூனிஸ்டு பிரமுகரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    பாகூர்:

    பாகூரை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்டு பிரமுகர் விஜயபாலன் (வயது 51). இவர், கட்சியின் தொகுதி குழு உறுப்பினராகவும், விவசாயிகள் தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார்.

    இவருடைய வீடு பாகூர்பேட் லெனின் வீதியில் உள்ளது. வீட்டில் இருந்து தினமும் பாகூர் கன்னிக்கோவில் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு காலையில் வருவது வழக்கம்.

    இந்த அலுவலகம் துணிக்கடை ஒன்றின் மாடியில் இருக்கிறது. இன்று காலை விஜயபாலன் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அலுவலகத்தில் வேறு யாரும் இல்லை அவர் மட்டும் தனியாக அமர்ந்திருந்தார்.

    அப்போது மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்து விஜயபாலனை சரமாரியாக வெட்டினார். அதை விஜயபாலன் தடுக்க முயன்றார். இதனால் கை மற்றும் உடலில் வெட்டு விழுந்தது. தலையிலும் வெட்டினார்.

    அவருடைய அலறல் சத்தம் கேட்டு கீழே இருந்த பொதுமக்கள் உள்ளே ஓடினார்கள். விஜயபாலனை வெட்டியவரை தடுத்து அவரை தாக்கினார்கள்.

    பின்னர் அவரை வலுக்கட்டாயமாக ஒரு அறைக்குள் தள்ளி பூட்டினார்கள். போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து அந்த நபரை கைது செய்தனர்.

    படுகாயம் அடைந்திருந்த விஜயபாலனை 108 ஆம்பு லன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விஜயபாலனை வெட்டிய நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், அவரது பெயர் ஸ்ரீதர் என்றும், வளவனூரை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. பாகூரில் அவரது மனைவியின் பெற்றோர் வீடு உள்ளது.

    அங்கு வந்த இடத்தில் விஜயபாலனை அவர் வெட்டி உள்ளார். அவரை ஏன் வெட்டினார்? என்பது மர்மமாக இருக்கிறது. அது பற்றி தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    விஜயபாலன் வெட்டப்பட்ட தகவல் அறிந்ததும் ஏராளமான கம்யூனிஸ்டு தொண்டர்கள் அங்கு திரண்டனர். இதனால் பாகூரில் பரபரப்பு ஏற்பட்டது. 

    Next Story
    ×