search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து 3 அரசு பஸ்கள் மீது கல்வீச்சு
    X

    கருணாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து 3 அரசு பஸ்கள் மீது கல்வீச்சு

    நெல்லை அருகே கருணாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து 3 அரசு பஸ்கள் மீது நள்ளிரவில் கற்கள் வீசப்பட்டதில் 2 பெண்கள் படுகாயமடைந்தனர்.
    களக்காடு:

    முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நடத்தி வரும் கருணாஸ் எம்.எல்.ஏ. கடந்த 16-ந்தேதி சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதில் பேசிய போது, முதலமைச்சர் மற்றும் போலீசாரை தாக்கி பேசினார். மேலும் சாதி மோதல் ஏற்படுத்தும் விதமாக பேசியதால் அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக கொலை முயற்சி, 2 சமூகத்தினரிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பேசியது, கலவரத்தை தூண்டும் வகையில் அவதூறு பரப்பியது உள்ளிட்ட 8 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கருணாஸ் கைது செய்யப்பட்டார்.

    இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் அசம்பாவித நடவடிக்கைகளில் ஈடுபடாதவாறு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    நெல்லை மாவட்டத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. நாங்குநேரி, சீவலப்பேரி, தாழையூத்து, பனவடலி சத்திரம், கடையநல்லூர், நெல்லை சந்திப்பு, சி.என்.கிராமம், சுத்தமல்லி பகுதியில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டனர். மேலும் அந்த பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றியும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் கருணாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து நெல்லை அருகே நேற்று நள்ளிரவு 3 அரசு பஸ்கள் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கினர். இதில் அந்த பஸ்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. மேலும் 2 பெண் பயணிகள் காயம் அடைந்தனர். அதுபற்றிய விபரம் வருமாறு:-

    நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு நேற்று இரவு ஒரு அரசு பஸ் வந்து கொண்டி -ருந்தது. நள்ளிரவு 11 மணிக்கு அந்த பஸ் நாங்குநேரி அருகே உள்ள நம்பிநகர் பகுதியில் வந்தது. அப்போது இருட்டில் மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென அந்த பஸ் மீது கற்களை வீசி தாக்கினர்.

    இதில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதில் அந்த பஸ்சில் பயணம் செய்த பாளை மேலப்பாளையத்தை அடுத்த கருங்குளத்தை சேர்ந்த சொர்ணக்கிளி என்பவரின் மனைவி பாலம்மாள் (வயது65) என்பவர் படுகாயம் அடைந்தார்.

    இதே போல் திசையன்விளையில் இருந்து நெல்லை நோக்கி நேற்றிரவு வந்த மற்றொரு அரசு பஸ் மீதும் மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். நாங்குநேரி அருகே தட்டான் குளம் பகுதியில் பஸ் வந்தபோது இந்த சம்பவம் நடந்தது.

    இதில் பஸ்சின் கண்ணாடிகள் உடைந்ததில், அதில் பயணம் செய்து வந்த நெல்லை புதுப்பேட்டையை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மனைவி விஜயலட்சுமி (37) என்பவர் படுகாயம் அடைந்தார்.

    இந்த சம்பவங்கள் குறித்து பஸ் டிரைவர்கள் நாங்குநேரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கல்வீச்சில் காயமடைந்த விஜயலட்சுமி, பாலம்மாள் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதன் தொடர்ச்சியாக நாகர்கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்ற அரசு பஸ் மீது வள்ளியூர் அருகே கோவநேரி பகுதியில் மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கினர். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்து நொறுங்கிய போதும், அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணம் செய்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இந்த 3 கல்வீச்சு சம்பவங்கள் குறித்தும் நாங்குநேரி மற்றும் வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கல்வீசி தாக்கிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்தம் சம்பவம் நாங்குநேரி, வள்ளியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×