search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு போக்குவரத்துக்கழக பணிமனை மெக்கானிக் வீட்டில் 40 பவுன்- ரூ.1½ லட்சம் கொள்ளை
    X

    அரசு போக்குவரத்துக்கழக பணிமனை மெக்கானிக் வீட்டில் 40 பவுன்- ரூ.1½ லட்சம் கொள்ளை

    அரசு போக்குவரத்துக் கழக மெக்கானிக் வீட்டில் 40 பவுன் மற்றும் ரூ.1½ லட்சம் கொள்ளை போனதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    உசிலம்பட்டி:

    உசிலம்பட்டியை சேர்ந்தவர் வீரக்குமார் (வயது48). இவர் அங்குள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் மெக்கானிக்காக உள்ளார். இவரது வீடு உசிலம்பட்டி -மதுரை சாலையில் உள்ளது. கடந்த சில மாதங்களாக வீரக்குமாரின் மனைவி ஈஸ்வரி உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.

    இதற்காக மதுரையில் உள்ள ஆஸ்பத்திரியில் 5 மாதங்களாக உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் வீரக்குமார் மட்டுமே வீட்டில் இருந்துள்ளார்.

    நேற்று இரவு அவர் வீட்டில் ஒரு அறையில் படுத்திருந்தார். இன்று காலை எழுந்த அவர் பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் இருந்த நகை பெட்டி கீழே தனியாக கிடந்தது. எனவே கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்து இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து உசிலம்பட்டி போலீசில் வீரக்குமார் புகார் செய்தார். அதில், பீரோவில் இருந்த 40 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கொள்ளைபோய் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டில் முன்பக்க கதவு தாழ்ப்பாள் மட்டும் உடைந்திருப்பது தெரியவந்தது. வீட்டின் பீரோவில் இருந்த துணிமணிகள் மற்றும் பொருட்கள் அப்படியே இருக்க நகைப்பெட்டி மட்டும் கீழே கிடந்தது.

    எனவே வீட்டிற்குள் கொள்ளையர்கள் வந்தார்களா? வீரக்குமார் கூறுவது உண்மைதானா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×