search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை கொள்ளை முயற்சி நடந்த காக்காவேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தோற்றம்
    X
    நகை கொள்ளை முயற்சி நடந்த காக்காவேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தோற்றம்

    காக்காவேரி கூட்டுறவு கடன் சங்கத்தில் கொள்ளை முயற்சி- ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகள் தப்பின

    ராசிபுரம் அருகே காக்காவேரியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்த கொள்ளை முயற்சியில் ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகள் தப்பியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகேயுள்ள காக்காவேரியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு சங்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கூட்டுறவு சங்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் உள்பட பல்வேறு கடன்களை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகள், பொதுமக்களுக்கு நகைக் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

    தினந்தோறும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு சங்கத்தின் செயலாளராக முத்துசாமி இருந்து வருகிறார். இவரை தவிர பணியாளர்கள், காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை கூட்டுறவு சங்கத்திற்கு விடுமுறை. இதையொட்டி நேற்று மாலையில் செயலாளர் முத்துசாமி கூட்டுறவு சங்கத்திற்கு வந்து மின் விளக்கு போட்டுவிட்டுச் சென்றுள்ளார்.

    இரவு நேரத்தில் மர்ம நபர்கள் யாரோ கூட்டுறவு சங்க கட்டிடத்தின் கிழக்குப்புறத்தில் ஏணியை வைத்து மேலே ஏறியுள்ளனர். இரும்புத் தகரத்தால் மூடப்பட்டுள்ள கட்டிடத்தின் மேல்பகுதியில் உள்ள சிமெண்ட் பட்டைகளை கடப்பாரையால் உடைத்து கட்டிடத்திற்குள் இறங்கி உள்ளனர். உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அந்த அறையின் கதவைத் திறந்து கொண்டு லாக்கர் உள்ள அறையின் கதவை கடப்பாரையால் நெம்பி உள்ளனர். அந்த சமயத்தில் அலாரம் அடித்தால் கொள்ளையர்கள் தங்களது கொள்ளை முயற்சியை கைவிட்டு விட்டு தப்பித்து சென்றார்களா? அல்லது வேறு காரணமா? என்று தெரியவில்லை. சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த ஏணியை கொள்ளையர்கள் சுவற்றின் மீது ஏறுவதற்கு பயன்படுத்தி உள்ளனர்.

    இந்த சமயத்தில் வழக்கம் போல் இரவு காவலர் சேகர் (54) பணிக்கு வந்துள்ளார். அவர் உள்ளே சென்று பார்த்தபோது சங்க கட்டிடத்தின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருப்பதையும், லாக்கர் வைத்துள்ள அறையின் கதவை கடப்பாரையால் நெம்பி இருப்பதையும் கண்டு திடுக்கிட்டார். இது பற்றி கூட்டுறவு சங்கத்தின் மேலாளர் முத்துசாமிக்கு தகவல் தந்தார். இது பற்றி கேள்விபட்டதும் செயலாளர் முத்துசாமி சங்கத்திற்கு விரைந்து வந்தார்.

    இது பற்றி அவர் நாமகிரி பேட்டை போலீசாருக்கு தகவல் தந்தார். அதன்பேரில் நாமகிரி பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப் இன்ஸ்பெக்டர் செட்டியண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கூட்டுறவு சங்கத்தில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளனவா? என்று விசாரணை நடத்தினார்கள். நாமக்கல்லில் இருந்து துப்பறியும் போலீஸ் நாய் பொய்கை வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை முயற்சி நடந்த கூட்டுறவு சங்க கட்டிடத்தை சுற்றி வந்தது. பிறகு ராசிபுரம்-நாமகிரிபேட்டை சாலையில் மேற்கே சிறிது தூரம் ஓடியது. ஆனால் எந்தவித தடயமும் கிடைக்கவில்லை. கைரேகை நிபுணர்களுக்கு தகவல் தந்துள்ளனர்.

    கொள்ளை முயற்சி நடந்த கூட்டுறவு சங்கத்திற்கு கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாலமுருகன், துணை பதிவாளர் ரவிச்சந்திரன், வட்டார கள அலுவலர் வைத்திலிங்கம், பீல்டு ஆபீசர் ஈஸ்வரமூர்த்தி, பேங்க் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் விரைந்து வந்தனர். அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்கள் லாக்கர் வைத்துள்ள அறையை திறக்க முடியாமல் தப்பித்து சென்றுள்ளதால் ரூ. 5 கோடி மதிப்புள்ள பலரது நகைகள் தப்பின.

    நாமகிரிபேட்டை போலீசார் மற்றும் கூட்டுறவு சங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டுறவு சங்கத்தில் கொள்ளை முயற்சி நடந்திருப்பதை கேள்விப்பட்டதும் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    Next Story
    ×