search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டிவனத்தில் லாரி டிரைவரை கத்தியால் குத்தி ரூ.16 ஆயிரம் கொள்ளை
    X

    திண்டிவனத்தில் லாரி டிரைவரை கத்தியால் குத்தி ரூ.16 ஆயிரம் கொள்ளை

    திண்டிவனத்தில் லாரி டிரைவரை கத்தியால் குத்து அவரிடம் இருந்து ரூ.16 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    திண்டிவனம்:

    பண்ருட்டியில் இருந்து கத்தரிக்காய் லோடு ஏற்றிக்கொண்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஒரு மினிலாரி புறப்பட்டது. இந்த லாரியை சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த டிரைவர் சலீம்(வயது 35) ஓட்டி வந்தார். அந்த லாரி திண்டிவனம் கருணாவூர்பேட்டை புறவழிச்சாலையில் நேற்று இரவு 9.30 மணிக்கு வந்தது.

    அப்போது லாரியை சாலையோரம் நிறுத்திய சலீம் கீழே இறங்கி சென்னையில் உள்ள தனது லாரி உரிமையாளரிடம் செல்போனில் பேசி கொண்டிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் 3 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் சலீமிடம் திண்டிவனத்துக்கு எப்படி செல்லவேண்டும் என்று பேச்சு கொடுத்தனர். அதற்கு எனக்கு வழி தெரியாது என்று சலீம் கூறினார்.

    திடீரென அந்த மர்ம மனிதர்கள் சலீமை தாக்கினர். உன்னிடம் உள்ள பணத்தை கொடு, இல்லையென்றால் உன்னை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர். பணம் கொடுக்க முடியாது என்று சலீம் கூறினார். இதை கேட்டு ஆத்திரம் அடைந்த அவர்கள் 3 பேரும் சேர்ந்து கத்தியால் சலீமை சரமாரியாக குத்தினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார்.

    இதையடுத்து சலீமின் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.16 ஆயிரத்து 500 பணத்தை அந்த மர்ம மனிதர்கள் கொள்ளையடித்தனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றுவிட்டனர். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து திண்டிவனம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பலத்த காயம் அடைந்த சலீமை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் சலீமை தாக்கி கொள்ளையடித்த மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    Next Story
    ×