search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர் அருகே வேன் விபத்து- 17 பெண்கள் படுகாயம்
    X

    கடலூர் அருகே வேன் விபத்து- 17 பெண்கள் படுகாயம்

    கடலூர் அருகே புதுவைக்கு வேலைக்கு சென்ற போது வேன் தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் 17 பெண்கள் படுகாயமடைந்தனர்.
    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள கலையூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் புதுவை மங்களம் பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் தினமும் ஒரு வேனில் கலையூரில் இருந்து புதுவைக்கு செல்வார்கள்.

    அதன்படி இன்று காலை கலையூர் கிராமத்தை சேர்ந்த கவுரி (வயது 30), சிவரஞ்சினி (33), அருணா (22) உள்ளிட்ட 17 பெண்கள் ஒரு வேனில் புதுவைக்கு புறப்பட்டனர். வேனை அதே பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் (28) ஓட்டி சென்றார். அந்த வேன் கடலூர் அடுத்த பள்ளிப்பட்டு- தென்னம்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. வேனில் இருந்த பெண்கள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூக்குரலிட்டனர். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். வேனின் இடிபாடுக்குள் சிக்கிய பெண்களை வெளியே மீட்டனர்.

    இந்த விபத்தில் வேனில் வந்த கவுரி, சிவரஞ்சனி, அருணா, பாத்திமா உள்ளிட்ட 17 பெண்கள் பலத்த காயம் அடைந்தனர். டிரைவர் ஆனந்த குமாரும் காயம் அடைந்தார். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து தூக்கணாம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×