search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாமக்கல்லில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் - ரூ.1.36 கோடியில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்
    X

    நாமக்கல்லில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் - ரூ.1.36 கோடியில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்

    நாமக்கல்லில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றிய மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம், 185 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 36 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    நாமக்கல்:

    சுதந்திர தினவிழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம், சரியாக காலை 9.20 மணிக்கு தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அவர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து வெண் புறாக்களையும், வண்ண பலூன்களையும் வானில் பறக்க விட்டார்.

    அதை தொடர்ந்து கலெக்டர், விழாவில் பங்கேற்ற சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். பின்னர் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசுத்துறை அலுவலர்களுக்கு, அவர்களது பணியினை பாராட்டி நற்சான்றிதழ்களையும் வழங்கினார்.

    பின்னர் வருவாய்த்துறையின் சார்பில் 123 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் உள்பட மொத்தம் 185 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 36 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    விழாவை முன்னிட்டு தொப்பப்பட்டி வாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கீரம்பூர் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பொம்மைகுட்டைமேடு காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அணியாபுரம் லிட்டில் ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, பொட்டணம் தி சைல்டு பிளான் அகாடமி பள்ளி, நாமக்கல் எம்.எஸ். உதயமூர்த்தி ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி, பாண்டமங்கலம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளி, எருமப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி என 8 பள்ளிகளைச் சேர்ந்த 618 மாணவ, மாணவிகள் பங்கேற்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    இதேபோல் புதியதாக இந்த ஆண்டு செவந்திப்பட்டி அரசு பள்ளி உள்பட 5 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளின் யோகா நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிறைவாக சுதந்திர தின விழாவில் பங்கேற்ற பள்ளிகளுக்கு சுழற்கேடயமும், குழந்தைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

    விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, மாவட்ட வன அலுவலர் டாக்டர் காஞ்சனா, நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்திகுமார், ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் மாலதி, முதன்மை கல்வி அதிகாரி உஷா உள்பட அரசுதுறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுகள், பயனாளிகள், பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×