search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு- சிதம்பரம் அருகே 7 கிராம மக்கள் 3-வது நாளாக தவிப்பு
    X

    கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு- சிதம்பரம் அருகே 7 கிராம மக்கள் 3-வது நாளாக தவிப்பு

    கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இன்று 3-வது நாளாக 7 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகிறார்கள். #kollidamriver

    ஸ்ரீமுஷ்ணம்:

    கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு அதிகதண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து அணையில் இருந்து 1½ லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    கொள்ளிடம் ஆற்றில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கீழணையை காவிரி நீர் வந்தடைந்தது. அங்கிருந்து வினாடிக்கு 85 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரிநீராக கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் சிதம்பரம் அருகே வல்லம்படுகை கொள்ளிடம் ஆறு வழியாக கொடியம் பாளையத்தில் வங்க கடலில் கலக்கிறது.

    இந்த நிலையில், கடலுக்குள் நீர் உள் வாங்காததால், வெள்ள நீர் எதிர்த்து பழைய கொள்ளிடம் ஆற்றில் உட்புகுந்துள்ளது. அந்த நீர் கரையோரம் உள்ள கீழகுண்டலபாடி, திட்டுக் காட்டூர், ஜெயங்கொண்டபட்டினம் உள்ளிட்ட 7 கிராமங்களை நேற்று முன்தினம் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் தவித்து வருகிறார்கள்.

    இன்று 3-வது நாளாக 7 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு இன்னும் தண்ணீர் வடிய வில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதியடைந்து வருகிறார்கள். இதனால் பெராம்பட்டு, திட்டுகாட்டிற்கும், இடையே அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் மூழ்கியது. இதனால் அங்கு போக்கு வரத்து துண்டிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கிராம மக்கள் தங்களது அவசர தேவைக்காக படகு மூலம் திட்டுக்காட்டூருக்கு சென்று வருகிறார்கள். படகில் அதிகபேர் செல்வதால் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    சிதம்பரத்தை அடுத்துள்ள வல்லம்படுகை அருகே எருக்கன்காட்டு படுகையில் ஊராட்சிஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியை சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக இன்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    கொள்ளிட கரையோர கிராமங்களில் உள்ள படுகை பகுதியில் பயிர் செய்யப்பட்ட மரவள்ளி கிழங்கு, வாழை, நெல், கத்திரி, வெண்டை, மிளகாய் உள்ளிட்ட பயிர்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. சுமார் 1000 ஏக்கர் பரப்பில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    இதற்கிடையே கர்நாடகா அணையில் இருந்து 2 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து 1.70 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் ஆற்றுப்பகுதிக்கு யாரும் செல்லக்கூடாது என்றும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் கொள்ளிட கரையோர மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இந்த நிலையில் வெள்ளம் பாதித்த கிராமங்களை பாண்டியன் எம்.எல்.ஏ., சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன், தாசில்தார் அமுதா ஆகியோர் படகு மூலம் சென்று பார்வையிட்டனர். அப்போது அவர்கள் உங்களுக்கு தேவையான குடிநீர், உணவு வசதிகள் செய்து தருகிறோம் எதற்கும் கவலைப்படவேண்டாம். 24 மணி நேரமும் தீயணைப் புதுறையினர் மீட்பு பணி யில் ஈடுபட தயாராக இருப்பதாக கூறினர்.

    Next Story
    ×