search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருத்தாசலம் அருகே கோவிலின் உண்டியலை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளை
    X

    விருத்தாசலம் அருகே கோவிலின் உண்டியலை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளை

    விருத்தாசலம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பெரிய வடவாடி உள்ளது. இங்கு நடுகாட்டு அம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாமிதரிசனம் செய்வதுவழக்கம். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலில் காணிக்கை பணம் செலுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த கோவிலில் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் காணிக்கை பணத்தை உண்டியலில் செலுத்தினர்.

    இந்த கோவிலில் பூசாரிகளாக முத்து, குமார் ஆகியோர் இருந்து வந்தனர். நேற்று இரவு பூஜை முடிந்ததும் இருவரும் கோவில் கதவை பூட்டிவிட்டு சென்றனர். நள்ளிரவு நேரத்தில் மர்ம மனிதர்கள் கோவிலின் சுற்றுசுவரை ஏறி குதித்து உள்ளே புகுந்தனர். 
    அவர்கள் கோவிலின் முன்பு இருந்த 5 அடி உயரம் உள்ள இரும்பு உண்டியலை வெல்டிங் மிஷன்மூலம் துளைபோட்டனர். பின்னர் அதில் இருந்த பணத்தை ஒரு பையில் மூட்டையாக கட்டிக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

    இன்று காலை பூசாரி குமார் வழக்கம்போல் கோவிலுக்கு வந்தார். கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது அங்கு உண்டியல் உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். 

    இதுகுறித்து அவர் மங்கலம்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். உண்டியலில் இருந்த ரூ.2 லட்சம் காணிக்கை பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்று இருந்திருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் இந்த கொள்ளையில் துப்பு துலக்க கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது கோவிலின் முன்பு மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது.

    விழுப்புரத்தில் இருந்து கைரேகை நிபுனர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களும் தடயங்களை பதிவு செய்தனர். உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஏற்கனவே இந்த கோவிலில் 3 முறை உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.
    Next Story
    ×