search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் கன மழை - வேலைக்கு செல்லாமல் தவிக்கும் தமிழக தொழிலாளர்கள்
    X

    கேரளாவில் கன மழை - வேலைக்கு செல்லாமல் தவிக்கும் தமிழக தொழிலாளர்கள்

    கேரளாவில் கன மழை தொடர்வதால் தமிழக தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அவதியடைந்துள்ளனர்.
    கூடலூர்:

    கேரளாவில் கன மழை தொடர்ந்து பெய்து வருவதால் அந்த மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கன மழைக்கு 29 பேர் பலியாகினர். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

    தற்போது இடுக்கி அணை உள்பட 24 பெரிய அணைகள் நிரம்பியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

    கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து தொழிலாளர்கள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலத்தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். தமிழக அரசு பஸ் மற்றும் ஜீப்புகளில் தினந்தோறும் சென்று திரும்புகின்றனர்.

    கட்டப்பணை, குமுளி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்பு அதிக அளவு இல்லா போதும் தற்போது காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் மரங்கள் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே தோட்ட வேலைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்ல வேண்டாம் என தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி தமிழக-கேரள எல்லையில் உள்ள தமிழக சோதனைச்சாவடியில் போலீசார் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    வேலைக்கு செல்லும் தோட்ட தொழிலாளர்களை பாதுகாப்பு கருதி திருப்பி அனுப்புகின்றனர். மேலும் 2 நாட்களுக்கு வேலைக்கு வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

    வேலை இழந்துள்ளதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    Next Story
    ×