search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி பெண் பலி
    X

    மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி பெண் பலி

    மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் துப்பட்டா சிக்கியதால் தடுமாறி விழுந்த பெண் பரிதாபமாக இறந்து போனார்.
    பாகூர்:

    தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் மாதவா நகர் பகுதியை சேர்ந்தவர் விளாசின். இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுனிதா (வயது 43). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். விளாசின் இருதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

    இதையடுத்து ஜிப்மர் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வரும் விளாசினியின் உறவினர் ஆலோசனையின் பேரில் கடந்த சில நாட்களாக விளாசின் தனது மனைவி சுனிதாவுடன் கடலூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்தார்.

    சம்பவத்தன்று விளாசின் தனது மனைவி சுனிதாவுடன் சிகிச்சை பெற மோட்டார் சைக்கிளில் ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு சென்றார். பின்னர் சிகிச்சை முடிந்து இருவரும் கடலூருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

    கிருமாம்பாக்கம் அருகே காட்டுக்குப்பம் துணை மின்நிலையம் எதிரே வந்த போது எதிர்பாராத விதமாக சுனிதா அணிந்திருந்த சுடிதார் துப்பட்டா மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சிக்கி கொண்டது. இதனால் சுனிதா மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்தார்.

    இதில், தலையில் பலத்த காயம் அடைந்த சுனிதா உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுனிதா நேற்று பரிதாபமாக இறந்து போனார்.

    இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×