search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாராபுரம் அமராவதி ஆற்றில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி பலி
    X

    தாராபுரம் அமராவதி ஆற்றில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி பலி

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி ஆற்றில் குளித்த வாலிபர் நீரில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
    தாராபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கண்ணன் தேவன் டீ எஸ்டேட்டில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருபவர் சங்கரபாண்டியன். இவரது மகன் கவியரசன்(வயது 28). இவர் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார்.

    இவர் தனது நண்பர்கள் 6 பேருடன் சிவகாசியில் நடைபெற்ற நண்பர் ஒருவரின் திருமணத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது தாராபுரம் அருகே வந்தபோது அமராவதி ஆற்றில் தண்ணீர் வருவதை பார்த்த அவர்கள் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கவியரசன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் சத்தம் போட்டனர்.

    அப்போது அங்கு குளித்து கொண்டிருந்த பொதுமக்கள் இதுகுறித்து தாராபுரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் தீயணைப்பு வீரர்களுடன் விரைந்து வாலிபரை தேடும்பணியில் ஈடுபட்டனர்.

    நேற்று இரவு வரை தேடியும் கவியரசனை மீட்க முடியவில்லை. தொடர்ந்து இன்று காலை முதல் தேடுதல் பணி நடந்து வருகிறது. தீயணைப்பு துறையினருடன் உள்ளூர் நீச்சல் வீரர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது கவியரசன் உடல் சிக்கியது. அதனை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×