search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தந்தை ஓட்டிய கார் குழந்தையின் உயிரை பறித்தது
    X

    தந்தை ஓட்டிய கார் குழந்தையின் உயிரை பறித்தது

    கட்டிட தொழிலாளி காரை பின்னோக்கி ஓட்டி வந்த போது எதிர்பாராதவிதமாக மோதியதில் அவருடைய 2 வயது ஆண் குழந்தை பரிதாபமாக இறந்ததது.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மேலகிருஷ்ணன்புதூர் அருகே உள்ள நைனாபுதூரை சேர்ந்தவர் ஜெகன் (வயது 25), கட்டிட தொழிலாளி. அவருடைய மனைவி சுகன்யா (25). இவர் களுடைய மகள் அக்‌ஷிதா (4), மகன் லெக்‌ஷய் (2).

    நேற்று காலையில் ஜெகன் தனது காரை வீட்டு வாசலில் நிறுத்தி இருந்தார். அவருடைய குழந்தைகள் இருவரும் வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது காரை கழுவுவதற்காக ஜெகன் சற்று பின்னோக்கி ஓட்டி வந்தார்.

    அப்போது, திடீரென்று காரின் பின்பக்கத்தில் இருந்து மகன் லெக்‌ஷயின் அலறல் சத்தம் கேட்டது. உடனே, ஜெகன் காரை நிறுத்திவிட்டு பின்னால் சென்று பார்த்தபோது, அங்கு லெக்‌ஷய் ரத்த வெள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கார் பின்னோக்கி வந்தபோது எதிர்பாராதவிதமாக குழந்தையின் மீது மோதியது தெரிந்தது. உடனே, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது குழந்தை லெக்‌ஷய் பரிதாபமாக இறந்து விட்டது தெரியவந்தது. இதை அறிந்ததும் ஜெகனும், அவருடைய குடும்பத்தினரும் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இதுபற்றி ஜெகனின் மனைவி சுகன்யா சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×