search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியதால் டாக்டர் தற்கொலை முயற்சி - 3-வது நாளாக டாக்டர்கள் வேலை நிறுத்தம்
    X

    சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியதால் டாக்டர் தற்கொலை முயற்சி - 3-வது நாளாக டாக்டர்கள் வேலை நிறுத்தம்

    சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியதால் மனமுடைந்த பெண் டாக்டர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சம்பவம் தொடர்பாக 3-வது நாளாக டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலை:

    சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் அவதூறு பரப்பியதால் மனமுடைந்த திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரி பெண் டாக்டர், தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சம்பவம் தொடர்பாக நேற்று 3-வது நாளாக டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை நல்லவன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயக்குமார் (வயது 30). இவர், தனது மனைவியின் கருவை கலைக்க திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு வந்தார். அப்போது மகப்பேறு பிரிவில் பணியில் இருந்த டாக்டர் பவானிக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த விஜயக்குமார், அந்த பெண் டாக்டரை செல்போனில் புகைப்படம் எடுத்து அதனை முகநூல், ‘வாட்ஸ் அப்’ போன்றவற்றில் பதிவேற்றம் செய்து அவதூறாகவும், ஆபாசமாகவும் கருத்துக்களை பதிவு செய்து உள்ளார்.

    இதுகுறித்து டாக்டர் பவானி கொடுத்த புகாரின் பேரில் விஜயக்குமாரை திருவண்ணாமலை கிழக்கு போலீசார் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து விஜயக்குமார் மீது மருத்துவமனை மருத்துவர்கள் பணி பாதுகாப்பு சட்டம் 48-ன் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். சமூக வலைத்தளத்தில் டாக்டர் பவானிக்கு எதிராக ஆபாசமான கருத்துக்களை தெரிவித்த 10 நபர்களையாவது போலீசார் உடனே கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7-ந் தேதி முதல் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலை நிறுத்த போராட்டம் நேற்றும் 3-வது நாளாக தொடர்ந்து நடைபெற்றது. போராட்டத்தில் தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கத்தினர், மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள், பயிற்சி டாக்டர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    டாக்டர் பவானி, தனது கணவர் சூரியபிரகாசுடன் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள செல்வாநகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்த சம்பவத்தினால் மனமுடைந்த அவர் நேற்று அதிகாலையில் வீட்டில் இருந்த தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    முன்னதாக நேற்று காலை திருவண்ணாமலை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு வந்த மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின்ஜோ, மருத்துவமனை டீன் நடராஜன் மற்றும் முதுநிலை டாக்டர்கள் முன்னிலையில் பவானியின் கணவர் டாக்டர் சூரியபிரகாசிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தியும், அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதையடுத்து மருத்துவ கல்விஇயக்குனர், போராட்டத்தில் ஈடுபடும் டாக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். 
    Next Story
    ×