search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூங்குடியில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 10 பேர் காயம்
    X

    பூங்குடியில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 10 பேர் காயம்

    பூங்குடியில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்து வந்த காளைகள் முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே உள்ள பூங்குடியில் அறம் வளர்த்த அம்மன் விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடந்த திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதற்காக நடந்த முன்னேற்பாடு பணிகளை நேற்று முன்தினம் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கினர். இதைத்தொடர்ந்து நேற்று காலையில் அறம் வளர்த்த அம்மன் விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடை பெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஆறுமுகம் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு தொடங்கியது.

    முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. தொடர்ந்து புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 810 காளைகள் வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. அவிழ்த்து விடப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து சென்றன. சீறிபாய்ந்து சென்ற காளைகளை சுமார் 220 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு போட்டி போட்டு அடக்கினார்கள்.

    இதில் சில காளைகள் மாடுபிடி வீரர்களை பந்தாடியது. சில காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்தனர். இதில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 10 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். தொடர்ந்து காயமடைந்தவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

    ஜல்லிக்கட்டில் காளைகளை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் ரொக்க பணம், வெள்ளி நாணயம், சைக்கிள், சேர் உள்பட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டை பூங்குடி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். ஜல்லிக்கட்டை முன்னிட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வாசுதேவன், கருணாகரன் முன்னிலையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
    Next Story
    ×