search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை செய்து கொண்ட ரபீனா
    X
    தற்கொலை செய்து கொண்ட ரபீனா

    பிளஸ்-1 தேர்வில் தோல்வி: தீக்குளித்த மாணவி சிகிச்சை பலனின்றி பலி

    சேலத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால் தீக்குளித்த மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    சேலம்:

    சேலம் சூரமங்கலம் ஆண்டிப்பட்டி, மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம். கொத்தனார். இவரது மகள் ரபீனா (வயது 18).

    இவர் மேச்சேரியில் உள்ள தனது பாட்டி அம்மாசி வீட்டில் தங்கி இருந்து அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    இந்த நிலையில், பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதி முடித்ததை அடுத்து கோடை விடுமுறையில் ரபீனா மாதா கோவில் தெருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்தார்.

    கடந்த 30-ந்தேதி அன்று பிளஸ்- 1 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் ரபீனா தோல்வி அடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டில் இருந்த மண்எண்ணை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

    சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து ரபீனாவை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீக்காயம் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இருப்பினும் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. இன்று அதிகாலை சுமார் 6 மணிக்கு மாணவி ரபீனா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    மகளின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

    மாணவி தற்கொலை செய்து கொண்டது பற்றி உருக்கமான தகவல் கிடைத்துள்ளது. மாணவியின் தாய் கண்ணீர் மல்க போலீசாரிடம் கூறியதாவது:-

    எனது மகள் ரபீனா பிளஸ்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று விடுவேன் என என்னிடம் உறுதியாக கூறினார். இதனால் நான் தேர்வு முடிவு வெளியான நாள் அன்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தேன். மகள் தேர்வில் எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்துள்ளார் என்பதை பார்க்க வேண்டி ஆவலுடன் காத்திருந்தேன்.

    தேர்வில் தோல்வி அடைந்ததை அறிந்ததும் ரபீனா மனம் உடைந்தார். 11-ம் வகுப்பு தோல்வி அடைந்தாலும் தொடர்ந்து 12-ம் வகுப்பில் சேர்ந்து படிக்கலாம் என அவருக்கு தைரியம் கொடுத்தேன்.

    பின்னர் சமையல் செய்வதற்காக நான் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்ற நேரத்தில் ரபீனா தீக்குளித்து விட்டார். நான் எங்கும் செல்லாமல் வீட்டில் இருந்திருந்தால் எனது மகளை நான் இப்போது உயிருடன் பார்த்து இருப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    Next Story
    ×