search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புழல் சிறையில் பழைய ரூபாய் நோட்டுகளை கூழாக்கி ‘கோப்பு அட்டைகள்’ தயாரிப்பு
    X

    புழல் சிறையில் பழைய ரூபாய் நோட்டுகளை கூழாக்கி ‘கோப்பு அட்டைகள்’ தயாரிப்பு

    புழல் சிறையில் உள்ள கைதிகள், பழைய மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை அரைத்து கூழாக்கி கோப்பு அட்டைகள் தயாரித்து மத்திய அரசு அலுவலகங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.
    செங்குன்றம்:

    சென்னையை அடுத்த புழல் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள் ஏராளமானோர் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த கைதிகள் புழல் சிறைக்குள் பேக்கரி பொருட்கள், அழகு சாதனப்பொருட்கள், எழுதுபொருட்கள் உள்ளிட்டவைகளை தயாரித்து வருகின்றனர்.

    கைதிகள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்காக சிறை வளாகத்தில் அங்காடியும் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதிகள் மூலம், மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை அரைத்து அதனை ஆவணங்கள் வைக்க பயன்படும் கோப்பு அட்டைகளாக (பைல் பேடு) தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தமிழக சிறைத்துறை டி.ஐ.ஜி.(பொறுப்பு) ஏ. முருகேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய ரிசர்வ் வங்கி தமிழக சிறைகளுக்கு சுமார் 70 டன் பழைய மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை வழங்குகிறது. புழல் சிறைக்கு சுமார் 9 டன் பழைய ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து வந்து உள்ளது. இதில் மத்திய அரசால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் சுமார் 1½ டன் அடங்கும். அந்த ரூபாய் நோட்டுகளை அரைத்து கூழாக்கி கோப்பு அட்டைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    பழைய ரூபாய் மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகள் முதலில் கைதிகள் மூலம் துண்டு துண்டாகி வெட்டப்பட்டு, பின்னர் பெரிய தொட்டியில் போட்டு அரைத்து கூழாக்கப்படுகிறது. அதன்பிறகு கைதிகளே அதில் இருந்து கோப்பு அட்டைகளை தயாரிக்கின்றனர். தினமும் சுமார் 1,000 கோப்பு அட்டைகள் தயாரிக்கப்படுகிறது.



    இந்த பணியில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட 25 முதல் 30 வரையிலான ஆயுள் தண்டனை கைதிகள் ஈடுபடுகின்றனர். இதற்காக தினமும் 8 மணி நேர வேலைக்காக அவர்களுக்கு ரூ.160 முதல் ரூ.200 வரை கூலி கொடுக்கப்படுகிறது. ஒரு மாதத்தில் 25 நாட்கள் இந்த பணிகள் நடைபெறுகிறது. இவற்றில் அவசர கோப்பு அட்டைகள், சாதாரண கோப்பு அட்டைகள் என அடையாள குறியீடுகளும் இணைக்கப்படுகிறது.

    தயார் செய்யப்பட்ட கோப்பு அட்டைகள் அனைத்தும் மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் இதர அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    தமிழகத்தின் மற்ற 6 சிறைகளிலும் இவ்வாறு தயாரிக்கப்பட்டாலும் அங்கு கிழிந்த ரூபாய் நோட்டுகளை மட்டுமே பயன்படுத்தி கோப்பு அட்டைகள் தயாரிக்கப்படுகிறது. ஆனால் புழல் சிறையில் மட்டும்தான் கிழிந்த ரூபாய் நோட்டுகளுடன், மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளையும் அரைத்து கூழாக்கி கோப்பு அட்டைகள் தயார் செய்யப்படுகிறது. இவ்வாறு தமிழக சிறைகளில் இருந்து மாதத்திற்கு 1½ லட்சம் கோப்பு அட்டைகள் தயார் செய்யப்படுகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    Next Story
    ×