search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பி.பி.எப். திட்டத்தின் சிறப்பம்சங்கள் தெரியுமா?
    X

    பி.பி.எப். திட்டத்தின் சிறப்பம்சங்கள் தெரியுமா?

    நிலையான, உத்தரவாத லாபம், அரசாங்கப் பாதுகாப்பு மற்றும் தொந்தரவு இல்லாதது போன்றவற்றால், ஆபத்தை விரும்பாத முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது பி.பி.எப்.
    பி.பி.எப். எனப்படும் பொது வருங்கால வைப்புநிதி குறித்த விவரங்களை பலர் அறிந்திருப்பதில்லை. எல்லோருக்கும் ஏற்ற திட்டம் இந்த பி.பி.எப். பணத்தைச் சேமிக்க விரும்பும் நடுத்தர மக்களுக்கு ஏற்றது இது.

    நிலையான, உத்தரவாத லாபம், அரசாங்கப் பாதுகாப்பு மற்றும் தொந்தரவு இல்லாதது போன்றவற்றால், ஆபத்தை விரும்பாத முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது பி.பி.எப்.

    இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகளை இங்கே காணலாம்...

    * பொது வருங்கால வைப்புநிதிக் கணக்குகளைக் கூட்டாக இருவர் பெயரில் துவங்க முடியாது என்பது நமக்குத் தெரியும். ஆனாலும் பெற்றோர் தங்களின் மைனர் குழந்தையின் பெயரில் கணக்கு துவங்க முடியும். பெற்றோர் இருவரும் உயிரோடு இல்லாமல் இருந்தாலோ அல்லது செயல்படமுடியாமல் இருந்தாலோ, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பாதுகாவலர், மைனர் குழந்தையின் சார்பாகக் கணக்கு துவங்க முடியும். ஆனால் மைனர் குழந்தையின் சார்பாகப் பெற்றோர் பி.பி.எப். கணக்கு துவங்கும்போது, ஒரே குழந்தைக்குப் பெற்றோர் இருவரும் தனித்தனி கணக்குத் துவக்க இயலாது. மைனர் குழந்தை மேஜராகும்போது, அவரே பி.பி.எப். கணக்குதாரராகக் கருதப்படுவார். சட்டப்பூர்வ பாதுகாவலர் பி.பி.எப். கணக்கை கையாள முடியாது.

    * நம்முடைய பொது வருங்கால வைப்புநிதி கணக்கில் உள்ள பணம் நம்முடையது. நம்மைத் தவிர்த்து வேறு யாரும் அதை எடுக்க முடியாது. கடன் அல்லது ஏதேனும் சொத்துக்குப் பணம் செலுத்தும்போது வேறு தனிநபர் அல்லது நிறுவனத்தால் பி.பி.எப். கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியாது. இது உங்கள் சேமிப்புக்கு வழங்கப்படும் தரமான பாதுகாப்பு. வீட்டை அடமானம் வைத்து கடன் பெற்றிருந்தால், தவணைத் தொகையைச் செலுத்தவில்லை எனில் வீடு ஜப்தி செய்யப்படும் அபாயம் உள்ளது. அதுவே பி.பி.எப். பணம் என்றால், பி.பி.எப். கணக்கில் உள்ள பணத்தை எடுத்துக் கடனை அடைக்கும்படி சட்டப்படி உத்தரவிட முடியாது. இது ஒரு முக்கியமான பாதுகாப்பு. அதேநேரம், வருமானவரி பாக்கியை பி.பி.எப். கணக்கிலிருந்து எடுக்க வருமான வரித்துறைக்கு அதிகாரம் உள்ளது.

    * உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுதாரர்களை நியமிக்க பி.பி.எப். கணக்கில் அனுமதிக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட வாரிசுதாரர்களை நியமித்தால் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சதவீத பங்கு என பி.பி.எப். கணக்குதாரர் குறிப்பிடவேண்டும். ஆனால் மைனர்களின் சார்பாகத் திறக்கப்படும் கணக்குகளுக்கு வாரிசு தாரர் நியமிக்கமுடியாது. பி.பி.எப். கணக்கு காலத்தில் உங்களால் எத்தனை முறை வேண்டுமானாலும் வாரிசுதாரரை மாற்ற முடியும். ஆனால் ஓர் அறக்கட் டளையை வாரிசுதாரராக நியமிக்க முடியாது. வாரிசுதாரர்களால் பி.பி.எப். கணக்கை தொடர்ந்து பராமரிக்க முடியாது. பி.பி.எப். கணக்குதாரரின் இறப்பின்போது கணக்கில் உள்ள பணத்தைப் பெற அனைத்து உரிமையும் பெற வாரிசுதாரர் தகுதியுடையவர் ஆவார். அப்பணத்தை அறங்காவலராக இருந்து சட்டத்துக்கு உட்பட்டுப் பெறமுடியும்.

    * பி.பி.எப். கணக்கு துவங்கிய நாளிலிருந்து 15 ஆண்டுகள் பண முடக்கக் காலம் என்று பலர் தவறாகக் கருதுகிறார்கள். பி.பி.எப். விதிகளின் படி, வைப்புநிதி செய்யப்பட்ட நிதியாண்டின் கடைசி நாளிலிருந்து முதிர்ச்சியடையும் தேதி கணக்கிடப்படும். எனவே எந்த மாதம், எந்தத் தேதி கணக்குத் துவங்கப்பட்டது என்பது பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. நாம் பி.பி.எப். கணக்குக்கு முதல் முறை ஜூன் 1, 2018 அன்று பணம் செலுத்தினால், 15 ஆண்டுப் பணமுடக்கக் காலம் மார்ச் 31, 2019-ல் இருந்து கணக்கிடப்படும், முதிர்ச்சியடையும் தேதி ஏப்ரல் 1, 2034 ஆக இருக்கும். பணி ஓய்வு, வீடு வாங்குதல் அல்லது முக்கியக் கடனை திரும்பச் செலுத்துதல் போன்ற பொருளாதாரத் திட்டங்களை வகுக்கும் போது, பி.பி.எப். கணக்கின் முதிர்ச்சி காலத்தைக் கணக்கிடுகையில் இந்த வழிமுறையை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

    * சில முதலீட்டாளர்கள் தங்களின் பொது வருங்கால வைப்புநிதி கணக்கை மறந்துவிடுவார்கள். குறைந்தபட்ச வைப்புநிதி இல்லையென்றால், பி.பி.எப். கணக்கு கைவிடப்படும் நிலை ஏற்படும். பி.பி.எப். கணக்கு கைவிடப்பட்டால், அதிலுள்ள பணத்துக்கான வட்டி, முதிர்ச்சியின்போது மட்டுமே கிடைக்கும். இதுபோன்ற கைவிடப்பட்ட கணக்குகளில், முதிர்ச்சி அடையும் வரை ஒவ்வோர் ஆண்டின் இறுதியில் இருக்கும் பணத்துக்கு வட்டி கணக்கிடப்படும். பணம் எடுத்தல் மற்றும் கடன் பெறும் வசதியும் கைவிடப்பட்ட கணக்குகளுக்குக் கிடையாது. இந்த இரு வசதியும் பெற வேண்டும் என்றால், கைவிடப்பட்ட காலத்துக்கு உண்டான குறைந்தபட்ச சந்தாவையும், குறிப்பிட்ட அளவு அபராதத்தையும் கட்ட வேண்டும். நாம் எப்போதும், எந்நிலை யிலும் பொது வருங்கால வைப்புநிதி கணக்கை கைவிடக்கூடாது என்பதை இந்த விதிகள் உணர்த்துகின்றன. எனவே, பி.பி.எப். கணக்கின் மீது உரிய கவனம் செலுத்தி, ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்ச பணத்தையாவது முதலீடு செய்துவரவேண்டும். 
    Next Story
    ×