search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மருத்துவ குணமுள்ள களிநண்டு...
    X

    மருத்துவ குணமுள்ள களிநண்டு...

    களிநண்டில் வைட்டமின் பி, வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம், தாமிரம், அயோடின் மற்றும் மெக்னீசியம் இருக்கிறது. இச்சத்துகள் இருப்பதனால் களி நண்டை சமைத்து சாப்பிடுபவர்களுக்கு ஆஸ்துமா மற்றும் சளியை கட்டுப்படுத்துகிறது.
    காவிரி ஆற்றில் இருந்து ஆடி மாதத்தில் நன்னீர் சிதம்பரம் அருகில் உள்ள கிள்ளை ஆற்றுக்கு வருகை தரும். அவை வருகை தந்ததற்கு அடையாளமாக கிள்ளை ஆறு முழுவதும் தாமரை மலர்கள் நிறைந்திருக்கும். உலகின் இரண்டாவது மிகப் பெரிய சதுப்புநில சுரபுண்ணை வனம், கிள்ளை ஆற்றை சுற்றி உள்ளது. அவை அலையாத்திக் காடுகள் எனவும் அழைக்கப்படுகிறது.

    நாரைகளும்(கொக்கு) அறியாத நான்காயிரம் ஓடைகள் நிரம்பியது கிள்ளை ஆறு. அந்த ஆற்றில் உள்ள சில ஆழமான பகுதிகள் ‘குடா’ என அழைக்கப்படுகிறது. கடலின் முகத்துவாரம் வழியாக வருகிற உப்புநீரும், கொள்ளிடம் ஆற்றின் வழியாக வருகிற காவிரி நீரும் அங்குதான் சங்கமிக்கும். சங்கமிக்கும் அந்த குடா பகுதியில்தான் ஒருசில நீரினங்கள் இனப்பெருக்கம் செய்யும். நண்டு, இறால், மீன் ஆகிய உயிரினங்கள் ஜணிக்க உப்புநீர் மட்டும் போதாது, அதனுடன் மழைநீர் அல்லது நன்னீர் தேவைப்படும். இது நிலப்பகுதியில் வாழும் மக்கள் அறிவதில்லை. வெள்ளநீர் அபாயத்திலிருந்து பாதுகாக்கவே தண்ணீரை கடலிலே கலக்கிறார்கள் என்ற அளவில் மட்டுமே நினைக்கிறார்கள். ஆனால் அது ஒரு இயற்கை சுழற்சி.

    மீன்வளம் உருவாக நன்னீரின் பங்கு மிக முக்கியமானது. இந்த இரண்டு நீர்களும் சேர்ந்தால்தான் இனப்பெருக்கம் அதிகமாகும். இங்குள்ள சதுப்புநில காடுகளில் கண்டல், சுரபுண்ணை போன்ற மரங்கள் இருக்கும். இதில் சுரபுண்ணை மரம் மூலிகை குணம் நிரம்பியது. சுரபுண்ணை மரங்களின் கீழுள்ள நீரின் சேற்றில் அடியில் நண்டுகள் இனப்பெருக்கம் செய்யும்.

    சேற்றில் மூழ்கி தன்னை குளிர்ச்சியான தட்பவெட்ப நிலையில் வைத்து வாழக்கூடியது களிநண்டு. சேற்றின் மறு பெயர் களி என்பதனால் களிநண்டு என்று அழைக்கப்படுகிறது. இயற்கையின் வரமான சுரபுண்ணை மூலிகை குணம் நிரம்பியது. அந்த மூலிகை குணம் உள்ள சுரபுண்ணையின் வேர்களை களிநண்டு தின்று வாழ்கிறது. அதனாலேயே இந்த களிநண்டில் மருத்துவ குணம் உள்ளது. இங்கு உற்பத்தியாகும் களிநண்டுகளில் கொழுப்பு 9 சதவீதம் உள்ளது. 3.2 சதவீதம் தாதுப் பொருட்களும் 3.3 சதவீதம் மாவு சத்தும் 50 கலோரி ஏரிச்சத்தும் உள்ளது.

    களிநண்டில் வைட்டமின் பி, வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம், தாமிரம், அயோடின் மற்றும் மெக்னீசியம் இருக்கிறது. இச்சத்துகள் இருப்பதனால் களி நண்டை சமைத்து சாப்பிடுபவர்களுக்கு ஆஸ்துமா மற்றும் சளியை கட்டுப்படுத்துகிறது. இது ரத்த சிவப்பு அணுக்களை உருவாக்குவதால் சக்தி நிறைந்த உணவாக இருக்கிறது. இந்த வகை களி நண்டை சூப் செய்து குடித்தால் சளியை முறிக்கவும் செய்கிறது. களி நண்டுகள் கிள்ளை, பழையாறு, பழவேற்காடு, முத்துப்பேட்டை போன்ற பகுதிகளிலும் இன்னும் பல பகுதிகளிலும் கிடைக்கிறது. சதுப்புநில உப்பங்கழி பகுதிகளில் கிடைக்கும் இவ்வகை நண்டுகள் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

    கிள்ளை ஆற்றுப் பகுதியில் ஒருசில அரிய வகை மருத்துவ குணம் உள்ள மீன்கள் உள்ளன. காரை, மட்லீஸ், கிழங்கான், பிலிஞ்சான், ஓரா, பொருவா, சித்தாழை, நரிகெண்டை போன்ற மீன்களைக் கொண்டு ஒரு வகையான வட்டார மீன்குழம்பை செய்கின்றனர். அதனை பூண்டு மிளகுடன் சேர்த்து செய்வதால் மருந்து குழம்பு என்றழைக்கின்றனர்.

    பேறு கால பெண்களுக்கு வலி நிவாரணியாகவும், சோர்வை போக்குவதற்கு உதவுவதாகவும் இக் குழம்பு இருக்கிறது. கடல் மற்றும் உப்பங்கழியில் உள்ள மீன்களின் மருத்துவ குணங்கள் கணவாய் மீனில் உள்ள மக்னீசியம் மன அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. திலேப்பியாவில் உள்ள செலன்யம் புற்றுநோய் வருவதை தடுக்கிறது. பால்சுறா மற்றும் திருக்கை மீன் தாயப்பால் சுரப்பதை அதிகரிக்கிறது. சாளை மீனில் உள்ள அயோடின் கழுத்து கழலை நோயை தடுக்கிறது. கெளுத்தி மீனில் உள்ள துத்தநாகம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கெண்டை மீனில் உள்ள பொட்டாசியம் தசை செயல்பாடுகளை அதிகரிக்கிறது. ஆளி மீனில் உள்ள தாமிரத்தில் இன்சுலின் சுரக்க செய்யும் மருத்துவ குணம் உள்ளது.

    மத்தி, சூடை, கவளை போன்ற மீன்களில் உள்ள ஒமேகா 3 அமிலமானது மூளையின் செயல்பாட்டை அதிகரித்து நினைவாற்றலை வளர்த்து ரத்தக்குழாயில் உள்ள அடைப்புகளை நீக்கி, நரம்புகளின் செயல்பாட்டை அதிகரித்து நல்ல பார்வை திறனை தந்து, உடம்பில் உள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தக் கூடிய சிறந்த அருமருந்தாக திகழ்கிறது. அசைவத்தில் கால்நடை உணவுகளால் உண்டாகும் கொழுப்பைக் குறைக்கும் மருந்தாக இருக்கும் இக்கடல் உணவுகளை விரும்பி உண்டு நோயற்ற வாழ்வு வாழலாம்.

    நெய்தல் வய் நீதிமணி
    Next Story
    ×