search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் கசாயம்
    X

    டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் கசாயம்

    டெங்குவை குணப்படுத்த சித்த மருத்துவத்தின் மூலம் கிடைத்துள்ள நிலவேம்பு கசாயமும், பப்பாளி இலை சாரும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து காய்ச்சலை விரட்டுவதில் துரிதமாக செயல்படுகின்றன.
    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தலைமை அரசு மருத்துவமனைகளில் தனி வார்டு ஏற்படுத்தப்பட்டு, இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெங்குவை குணப்படுத்த ஆங்கில மருத்துவத்தில் மருந்து, மாத்திரைகள் இருந்தாலும் நமது முன்னோர்கள் விட்டுச்சென்ற சித்த மருத்துவத்தின் மூலம் கிடைத்துள்ள நிலவேம்பு கசாயமும், பப்பாளி இலை சாரும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து காய்ச்சலை விரட்டுவதில் துரிதமாக செயல்படுகின்றன.

    இதனால் தான் நிலவேம்பு கசாயம் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாநிலம் முழுவதும் மக்கள் கூடும் இடங்களில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. நிலவேம்பு என்பது வீடுகளில், காட்டுப் பகுதிகளில் வெள்ளைநிற பூ பூக்கும் ஒருவகை செடியாகும். இதை கிராமத்தில் உள்ள மக்கள் சிறியாநங்கை செடி என்று கூறுவார்கள். இந்த செடியானது அதிக கசப்பு தன்மை கொண்டது. இந்த மூலிகை மூலம் பலவிதமான நோய்களை தீர்க்க முடியும். தீராத காய்ச்சல், டெங்கு காய்ச்சல், மலேரியா காய்ச்சல், சிக்கன் குன்யா காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், தோல் நோய், நீர்கோர்வை, பித்தமயக்கம், மூட்டு வலி, உடல் வலி, எய்ட்ஸ் நோயான பால்வினை நோய் உள்ளிட்ட பெரும்பாலான நோய்களை குணமாக்க முடியும். மேலும் நிலவேம்பு, நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக் கூடியதாகும். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.

    நிலவேம்பு வேறு-நிலவேம்பு கசாயம் வேறு. டெங்கு காய்ச்சலுக்கு பயன்படுத்துகின்ற நிலவேம்பு கசாயத்தில் நிலவேம்பு மட்டும் சேர்க்கப்படுவதில்லை அதனுடன் 9 பொருட்கள் சேர்த்து நிலவேம்பு கசாயம் தயாரிக்கப்படுகிறது. அதாவது நிலவேம்பு என்கின்ற சிறியாநங்கை செடி, வெட்டிவேர், விலாமிச்சம் வேர், பற்படாகம், பேய் புடலை, கோரைகிழங்கு, சந்தன சிறாய், சுக்கு, மிளகு ஆகிய 9 பொருட்களையும் சம அளவு எடுத்து அரைத்து பொடியாக்கி விட்டு, ஒரு ஸ்பூன் பொடிக்கு 200 மில்லி தண்ணீர் வைத்து கொதிக்கவைக்கவேண்டும்.

    இந்த 200 மில்லி தண்ணீர் 50 மில்லி தண்ணீராக வற்றியவுடன் அதை வடிகட்டி மிதமான சூட்டில் குடிக்கவேண்டும். இந்த கசாயத்தை தயார் செய்த 4 மணி நேரத்திற்குள் குடிக்கவேண்டும். தாய் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. காய்ச்சல் இருப்பவர்கள் காலை, மாலை என ஒரு நாளைக்கு 2 வேளை குடிக்கவேண்டும். காய்ச்சல் நிற்கும் வரை குடிக்கலாம். சர்க்கரை நோயாளிகள் வாரம் 3 முறை குடித்து வந்தால் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

    நிலவேம்பு கசாயம் 9 மூலிகைகளின் கூட்டுப்பொருள் ஆகும். இந்த கசாயத்தை குடித்தால் நோய் எதிர்ப்பு சக்திதான் அதிகரிக்குமே தவிர நோய்கள் வராது. சித்தர்கள் எழுதிய நூல்களில் உள்ள மருந்துகளை பாரம்பரியமிக்க சித்த மருத்துவர்களை கொண்டு ஆராய்ச்சி செய்து அதன்மூலம் தான் மருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. சித்தர்கள் மருந்து தயாரிக்கும் முறையே தனித்தன்மை வாய்ந்ததாகும். அதாவது சுவை, வீரியம், விபாகம், பஞ்சபூத கூட்டுறவு கலவை சேர்ந்துதான் மருந்து தயாரிக்கப்படும்.

    எனவே, சித்த மருந்தால் எந்த வித பக்க விளைவோ, பாதிப்போ ஒரு காலமும் ஏற்படாது. இதனால் தான் தற்போது அனைவரும் சித்த மருத்துவத்தை நாடி வருகிறார்கள். நிலவேம்பு கசாயத்தில் சந்தனம் சேர்ப்பது உடலுக்கு தேவையான குளிர்ச்சியை கொடுக்கும். மிளகு விஷத் தன்மையை முறிக்கும். எனவே 9 வகையான மூலிகை சேர்ந்த நிலவேம்பு கசாயம் உடலுக்கு நன்மை அளிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பப்பாளி இலை சாரும், மலைவேம்பு சாரும் ரத்தத்தட்டுகளை அதிகரிக்கும். எனவே, மக்கள் யாரும் பயப்படாமல் நிலவேம்பு கசாயம் குடிக்கலாம்.

    பன்றிக்காய்ச்சல் உள்ளவர்களுக்கு காய்ச்சல், குமட்டல், வாந்தி, இருமல், தொண்டை வலி, உடல் சோர்வு, வயிற்றுப்போக்கு, குளிர் நடுக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும். இவர்களுக்கு சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீர் என்கின்ற கசாயம் வைத்து கொடுக்கப்படுகிறது. இந்த கசாயம் ஆடாதோடை, அக்ரகாரம், கற்பூரவல்லி, திப்பிலி, சீந்தில், கடுக்காய் தோல், நிலவேம்பு, கோஸ்டம், சிறுதேக்கு, முள்ளி, வட்டத்திருப்பி, லவங்கம், கோரை கிழங்கு, சுக்கு, சிறுகாஞ்சோறி ஆகிய 15 வகையான மூலிகைகளை சம அளவு எடுத்து பொடியாக்கவேண்டும்.

    அந்த பொடியில் 5 கிராம் எடுத்து கபசுரக்குடிநீர் கசாயத்தை 200 மில்லி தண்ணீரில் நன்கு காய்ச்சி 50 மில்லியாக்கி வடிகட்டி காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால் பன்றிக்காய்ச்சல் கட்டுப்படும். இந்த கசாயத்தை 3 மணி நேரத்தில் குடிக்கவேண்டும். அதன் பிறகு குடிக்கக்கூடாது. இந்த கபசுரக்குடிநீர் கசாயம் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கும். இதை சித்த மருத்துவ டாக்டரின் அறிவுரைப்படி பயன்படுத்தவேண்டும். தன்னிச்சையாக பயன்படுத்தவேண்டாம்.

    டாக்டர் சுபாஷ்சந்திரன்,

    அரசு சித்த மருத்துவ கல்லூரி விரிவுரையாளர், நெல்லை.
    Next Story
    ×