search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகள் விரல் சூப்புவதால் ஏற்படும் பிரச்சனைகள்
    X

    குழந்தைகள் விரல் சூப்புவதால் ஏற்படும் பிரச்சனைகள்

    குழந்தை பருவத்தில் வாயில் விரல் சூப்புவதால் பின்னாளில் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய முக்கிய விளைவுகளை குறித்து இங்கு பார்க்கலாம்.
    குழந்தைகள் பலருக்கு விரல் சூப்பும் பழக்கம் இருக்கும்; விரல் சூப்புவதால் என்ன விளைவு ஏற்படும் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் நாம் வளர்ந்ததால் தான் இன்று பலவித பற்கள் குறைபாடுகளும் ஏற்படுகிறது. நம்மில் பலருக்கு நிகழந்த இந்த உடல் மற்றும் மன மாற்றங்கள் நம் குழந்தைகளுக்கு ஏற்படாமல் இருக்க, குழந்தைகள் விரல் சூப்பினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று அறிந்து கொள்ளலாம்.

    இந்த பழக்கம் குழந்தையின் தனிமை, பசி உணர்வு காரணமாகவும் அவர்களில் ஏற்படலாம். குழந்தைகள் இவ்வாறு விரலை சூப்பிக் கொண்டே இருப்பது குழந்தைகளுக்கு பலவித பாதிப்புகளை ஏற்படுத்தும்; இப்பொழுது குழந்தை பருவத்தில் வாயில் விரல் வைப்பதால், பின்னாளில் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய முக்கிய விளைவுகளை குறித்து இங்கு பார்க்கலாம்.

    குழந்தைகள் தனது வளரும் குழந்தை பருவத்தில் வாயில் விரல் வைத்து உறங்குவது, எப்பொழுது பார்த்தாலும் விரலை வைத்துக் கொண்டே திரிவது, அவர்கள் வளர்ந்த பின் பால் பற்கள் முளைத்து, அவை விழுந்து பின்னர் பற்கள் முளைக்கும் பொழுது ஒரு வரிசையில் அல்லாமல், ஏறுமாறாக கோணலாக, எத்து பல்லாக வளர்ந்து விடும் வாய்ப்பு உள்ளது. மேலும் இப்படி வளர்ந்த பற்களில் அத்தனை பலம் இல்லாமல் போகும் நிலை உருவாகலாம்.

    குழந்தையாய் இருந்து சிறுவர் பருவத்திலும் கூட சூப்பிய கையை எடுக்காமல் குழந்தை வளர்ந்தால், பின்னர் குழந்தையின் கையில், விரல்களில் இரத்த ஓட்டம் குறைந்து அதனால் அவ்வுறுப்புகளின் செயல்படும் திறன் குறைந்து விரல்கள் உணர்வற்று போகும் நிலை உருவாகலாம். இந்த விளைவால் குழந்தைகளின் முக்கிய உறுப்பான கைகள் மற்றும் அவற்றின் இயக்கம் பாதிக்கப்படுகின்றன.



    குழந்தைகள் பிறந்ததில் இருந்து கடைபிடிக்கும் பழக்கத்தை பள்ளி சென்ற பின்னும் மேற்கொண்டால், அங்கு மற்ற குழந்தைகளின் ஆசிரியர்களின் கேலிக்கு உள்ளாகும் பொழுது குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் குழந்தை வாயில் எதையாவது வைத்து வளர்த்து பழக்கப்பட்டு விட்டதால், வளர்ந்த பின் வாயில் வைக்க எதையாவதை தேடும்; அந்த சமயத்தில் புகைபிடித்தல், மது, போதை போன்ற பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகிட அதிக வாய்ப்புகள் உள்ளன.

    இது போன்று பற்பல பாதிப்புகள் குழந்தையின் ஒரு சிறிய பழக்க வழக்கத்தால், விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து, பின்னாளில் குழந்தைகளின் வாழ்க்கையை பாதிக்கின்றன. ஆகையால், குழந்தைகளுக்கு இந்த பழக்கம் ஏற்படும் சிறு வயதிலேயே அவர்களுக்கு புரியும் வகையில் அன்பாக எடுத்து சொல்லி வாயில் கையை வைத்து வளர விடாமல் தடுக்க வேண்டும்.

     அதே சமயம் அவர்களின் உணர்வுகள் அதாவது குழந்தை பருவத்தில் இருக்கும் பய மற்றும் பாதுகாப்பு உணர்வுகள் குறித்து எந்தவித பாதிப்புகளும் குழந்தைகளிடம் ஏற்படாத வகையில், அவர்களை இந்த விரல் சூப்பும் பழக்கத்தில் இருந்து விடுபட செய்ய வேண்டும். குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, நிகழ்காலத்தில் அவர்கள் மனம் பாதிக்கப்பட்டு விடாமல் இருக்கும் வகையில் அன்பாய் எடுத்து சொல்லி குழந்தைகளை திருத்துவது பெற்றோரின் கடமையாகும்.
    Next Story
    ×