search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெற்றபோது எடுத்தபடம்.
    X
    மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

    தல்லாகுளம் பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம்

    மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. அன்னப்பல்லக்கில் சாமி தேவியர்களுடன் தெப்பத்தில் பவனி வந்தார்.
    திருமாலிருஞ்சோலை என்றும், தென்திருப்பதி என்றும் போற்றி அழைக்கப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்றானது, அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில். இக்கோவிலின் உப கோவிலானது, மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவில். இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழா முக்கியமானது.

    இந்த விழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் அன்ன வாகனம், கிருஷ்ண அவதாரம், சிம்ம வாகனம், ராமாவதாரம், அனுமன் வாகனம், கஜேந்திர மோட்சம், கருட வாகனம், சேஷ வாகனம், மோகனாவதாரம், யானை வாகனம், வெண்ணெய் தாழி, குதிரை வாகனம், பூப்பல்லக்கு, தீர்த்தவாரி, பூச்சப்பரம் போன்ற வாகனங்களிலும், அவதாரங்களிலும் பெருமாள் எழுந்தருளி அருள்பாலித்தார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தெப்ப உற்சவம் நேற்று நடைபெற்றது. முன்னதாக கோவில் தெப்பக்குளத்தில் தண்ணீர் இன்றி காணப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின் பேரில் கோவில் நிர்வாகத்தினர் முல்லைப் பெரியாறு கால்வாயில் இருந்து அதற்காக அமைக்கப்பட்டுள்ள கிளை கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து தெப்பத்தை நிரப்பி இருந்தனர். இதனையடுத்து நேற்று காலை 10.45 மணிக்கு தெப்ப உற்சவம் நடந்தது. இதில் மேளதாளம் முழங்க ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடாசலபதி பெருமாள் அலங்கரிக்கப்பட்ட அன்னப்பல்லக்கில் எழுந்தருளி தெப்பத்தில் வலம் வந்தார்.

    பின்னர் சாமி கோவிலின் மேற்கு மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு விசேஷ பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாலை 6 மணிக்கு மேல் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மறுபடியும் அன்னப்பல்லக்கில் சாமி எழுந்தருளி பவனி வந்தார். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை தல்லாகுளம் போலீசார் செய்திருந்தனர். 
    Next Story
    ×