search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் நாளை நடக்கிறது
    X

    கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் நாளை நடக்கிறது

    மானூரில் ஆவணி மூலத்திருவிழாவை முன்னிட்டு கருவூர் சித்தருக்கு சுவாமி நெல்லையப்பர் ஜோதி மயமாக காட்சி கொடுக்கும் வைபவம் நாளை நடக்கிறது.
    திருவளரும் கீரனூரில் பிறந்த கருவூர் சித்தர், தனது முன்வினை பயனால் தவம் செய்து எண் வகை சித்திகளும், சிவத்தல யாத்திரை பேறும் பெற்றிருந்தார். அதோடு அவர் எந்த சிவத்தலத்திலும் தாம் அழைத்தவுடன் இறைவன் நேரில் தோன்றி காட்சியளிக்கும் பேறும் பெற்று விளங்கினார். ஆனால் கருவூர் சித்தர் ஒவ்வொரு சிவத்தலமாக சென்று இறைவனை நேரில் அழைத்து நேரில் கண்டு வழிபட்டு வந்தார்.

    ஒரு நாள் கருவூர் சித்தர் பெருமை வாய்ந்த திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் முன்பு வந்து சுவாமி நெல்லையப்பரை அழைத்தார். அப்போது சுவாமி நெல்லையப்பரிடம் இருந்து பதில் வராததால் கோபம் அடைந்த சித்தர், ஈசன் இங்கு இல்லை. இவ்விடத்தில் எருக்கும் குறுக்கும் எழுக என சாபமிட்டு அருகில் உள்ள சிவத்தலமான மானூர் (மானையம்பதி) செல்ல முற்பட்டார்.

    இதனை அறிந்த நெல்லையப்பர் ஒரு சிவத்தொண்டராக வந்து சித்தரை தடுத்து அழைத்தார். சித்தர், அந்த சிவத்தொண்டரை பார்த்து, நீ யாரென்று கேட்க, தான் தொண்டருக்கெல்லாம் தொண்டர் என்று கூறி பணிந்தார். சற்றே கோபம் தணிந்த சித்தர், இறைவனை மானூர் வந்து தனக்கு காட்சியளித்து சாப விமோசனம் பெறச் சொல் என்று சிவத்தொண்டரிடம் கூறிவிட்டு மானூருக்கு புறப்பட்டார். தற்போது அந்த இடத்தில் தொண்டர் நயினார் கோவில் உள்ளது.

    எனவே மறுநாள் காலை சுவாமி நெல்லையப்பரும், காந்திமதி அம்மனும் மானூர் செல்லும் பொருட்டு, ராமையன்பட்டி வந்து, அங்கு சந்திரசேகரராகவும், பவானி அம்மனாகவும் மாறி மானூர் வருகின்றனர். இதற்கிடையே சித்தருக்கு இறைவன் காட்சி கொடுக்க போவதை அறிந்த மன்னர் பாண்டியராஜன், அகத்தியர், குங்குலிய நாயனார், சண்டிகேசுவரர், தாமிரபரணி அம்மன் ஆகியோர் சேர்ந்து தாங்களும் அந்த திருக்காட்சியை காண விரும்பி இறைவனோடு மானூர் வருகிறார்கள்.

    மானூரில் கருவூர் சித்தருக்கு இறைவன் ஜோதி மயமாக காட்சி தந்து அருளுகிறார். இதனால் சினம் தணிந்த கருவூர் சித்தரை அழைத்துக் கொண்டு இறைவன் உள்ளிட்ட யாவரும் நெல்லை நோக்கி வரும் வழியில் ராமையன்பட்டி வந்ததும் சந்திரசேகரரும், பவானி அம்மனும் மீண்டும் நெல்லையப்பர், காந்திமதி அம்மனாக மாறியதோடு குதிரையில் நெல்லை வருகிறார்கள்.

    இறைவன் தொண்டராக வந்து சித்தரை தடுத்த இடம் வந்ததும், ஈசன் இங்கு உளன். எருக்கும், குறுக்கும் அறுக என்று சாப விமோசனம் வழங்குகிறார் கருவூர் சித்தர். மேலும் ஆண்டுதோறும் வரும் ஆவணி மூலத்திருநாளன்று அடியேனுக்கு இறைவன் காட்சி கொடுக்க வேண்டும் என்றும், அக்காட்சியை கண்டு வழிபடுவோருக்கு முக்தி கிடைக்க இறைவன் அருள்புரிய வேண்டும் என்றும் இறைவனை கருவூர் சித்தர் வேண்டுகிறார். நெல்லையப்பரும் அவ்வாறே அருள்கிறார். இதுவே ஆவணி மூலத்திருவிழாவின் வரலாறு ஆகும்.

    நெல்லையப்பர் கோவில் விழாக்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆவணி மூலத்திருவிழாவாகும். இந்த விழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-ம் திருநாளான இன்று (திங்கட்கிழமை) காலை நெல்லையில் இருந்து கருவூர் சித்தர் மானூர் வந்தடைகிறார். சுவாமி சந்திரசேகரர், பவானி அம்மன், மன்னர் பாண்டியராஜன், அகத்தியர், சண்டிகேசுவரர், குங்கிலிய நாயனார், தாமிரபரணி அம்மன் ஆகிய மூர்த்திகளின் வீதிஉலா நிகழ்ச்சி நெல்லையில் நடக்கிறது.

    அதன் பின்னர் மேற்கண்ட மூர்த்திகள், மானூர் புறப்பட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை மானூர் வந்து சேர்கிறார்கள். அங்கு மானூர் அம்பலவாண சுவாமி கோவிலில் வைத்து கருவூர் சித்தருக்கு இறைவன் ஜோதி வடிவாக காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது. பின்னர் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகளும் நடக்கிறது. இந்நிகழ்ச்சியே ஆவணி மூலத்திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    விழாவை முன்னிட்டு மானூரில் ராட்டினங்கள், மிட்டாய் கடைகள், வளையல், பாத்திரக்கடைகள் உள்ளிட்ட கடைகள் அமைக்கப்பட்டு விழாக் கோலம் பூண்டுள்ளது. 
    Next Story
    ×