search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செட்டிப்பெண்ணுக்கு தாயுமானசுவாமி மருத்துவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்
    X
    செட்டிப்பெண்ணுக்கு தாயுமானசுவாமி மருத்துவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்

    மலைக்கோட்டை கோவிலில் செட்டிப்பெண்ணுக்கு தாயுமானசுவாமி மருத்துவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சி

    திருச்சி மலைக்கோட்டை கோவிலில் செட்டிப்பெண்ணுக்கு தாயுமானசுவாமி மருத்துவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். இது ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு சிவபெருமான், அவளுடைய தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம் ஆகையால், இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமான சுவாமி என்று அழைக்கப்படுகிறார்.

    இக்கோவிலில் சித்திரை தேர் திருவிழாவையொட்டி கடந்த 20-ந்தேதி விக்னேஸ்வர பூஜையும், வாஸ்து பூஜையும் நடைபெற்றது. 21-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி இரவில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

    திருவிழாவின் 5-ம் நாளான நேற்று காலை நூற்றுக்கால் மண்டபத்தில், சிவ பக்தியில் சிறந்த செட்டிப்பெண் ரத்தினாவதிக்கு சிவபெருமான் அவளுடைய தாய் வடிவில் (தாயுமானவராய்) வந்து மருத்துவம் செய்த ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் குழந்தையை தொட்டிலில் போட்டு தாலாட்டும் நிகழ்ச்சியும் நடந்தது.

    மாலையில் அறுபத்து மூவர் முதலான பக்தகோடிகள் சூழ ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி ரத்தினாவதி அம்மையாருக்கு காட்சியளித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து இரவில் சுவாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.

    மேலும் செட்டிப்பெண்ணுக்கு தாயுமானசுவாமி மருத்துவம் பார்க்கும் நிகழ்ச்சியில், திருமணம் ஆகி குழந்தை பேறு இல்லாத தம்பதிகள் கலந்து கொண்டு, அங்கு வழங்கப் படும் மருந்தை பிரசாதமாக பெற்று முறையாக சாப்பிட்டால், அந்த தம்பதிகளுக்கு ஒரு வருடத்திற்குள் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். அதன்படி நேற்று மருத்துவம் பார்க்கும் நிகழ்ச்சி முடிந்தவுடன், பகல் 12 மணிக்கு மேல் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மருந்து வழங்கப்பட்டது. இதில் பல தம்பதிகள் மருந்து வாங்கி சென்றனர்.

    6-ம் நாள் திருவிழாவான இன்று(புதன்கிழமை) காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளும் சுவாமி, அம்பாளுக்கு நூற்றுக்கால் மண்டபத்தில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இரவில் சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கு வாகனத்திலும் புறப்பாடு நடைபெறுகிறது.

    9-ம் நாள் திருவிழாவான வருகிற 28-ந்தேதி(சனிக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. இதில் அன்று காலை 5.15 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை மண்டல இணை ஆணையர் கல்யாணி, கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×