search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலைக்கோட்டை"

    • கோட்டையானது 16-ம் நூற்றாண்டில் சேந்தமங்கலம் பாளையக்காரரான ராமசந்திரன் நாயக்கரால் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.
    • கோட்டை மதில் சுவர் இடிந்து விழும் முன் சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டை உள்ளது. ஒரே கல்லால் ஆன இந்த மலையின் உச்சியில் 246 அடி உயரத்தில் கோட்டை மதில்சுவர் உள்ளது.

    இக்கோட்டையானது 16-ம் நூற்றாண்டில் சேந்தமங்கலம் பாளையக்காரரான ராமசந்திரன் நாயக்கரால் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.

    ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிடுவதற்காக திப்புசுல்தான் இம்மலைக் கோட்டையை பயன்படுத்தினார் என்ற வரலாற்று தகவல்களும் உண்டு.

    இத்தகைய சிறப்பு மிக்க மலைக்கோட்டையின் மேல் வரதராஜ பொருமாள் கோவிலும், மசூதியும் உள்ளன. இவை தவிர மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள குடைவறைக் கோவில்களான நரசிம்மர், அரங்கநாதர் கோவில்களும், மலையை ஒட்டி கமலாலயக் குளம் ஆகியவையும் உள்ளன.

    நாமக்கல் நரசிம்மர், ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலைக்கோட்டையை சுற்றி பார்த்து செல்வர்.

    இந்நிலையில் மலைக்கோட்டையின் மதில்சுவரானது ஆங்காங்கே சேதமடைந்து உள்ளது. மேலும் மழை பெய்யும்போது மதில் சுவரின் அடிப்பாகத்தில் இருந்து தண்ணீர் அருவி போல் வெளியேறுகிறது.

    இதனால் சுவரின் உறுதி தன்மை பாதிப்புக்குள்ளாகி வருகிறது.

    இதனால் கோட்டை மதில் சுவர் இடிந்து விழும் முன் சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதால் மத்திய தொல்லியல் துறையினர் நாமக்கல் மலைக் கோட்டையை நேரடியாக ஆய்வு செய்தனர்.

    இதுகுறித்து சேலம் மண்டல மத்திய தொல்லியல் துறை அதிகாரி ஸ்ரீதர் கூறியதாவது:

    நாமக்கல் மலைக் கோட்டை மதில்சுவர் ஆங்காங்கே இடிந்தும், விரிசல் அடைந்தும் உள்ளது. இதனை சீரமைக்க விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

    மேலும் காலை, இரவு நேரங்களில் மலைக்கோட்டையை ஆக்கிரமத்துக் கொள்ளும் சமூக விரோதிகளை கட்டுப்படுத்த நுழைவு வாயில் பகுதியில் இரும்பு வேலி அமைக்கவும், நரசிம்மர் கோவில் கொடிமர மண்டபத்தில் உள்ள விரிசலை புனரமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி தொல்லியல் துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளோம்.

    அனுமதி கிடைத்ததும் மலைக்கோட்டை சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×