search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிரச்சினையை உண்டாக்கும் மனம்
    X

    பிரச்சினையை உண்டாக்கும் மனம்

    இல்லாத ஒரு பிரச்சினையை, இருப்பதாக நினைத்துக் கொண்டு நமக்கான வெற்றிகளை நாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை பார்க்கலாம்.
    அவன் ஒரு பெரிய நாட்டின் மன்னன். நாட்டின் எல்லைகளை விஸ்தரிக்கத் தொடர்ந்து போர் புரிந்து கொண்டிருந்தான்.

    ஒரு நாள் இரவு... தொலை தேசத்தில் ஒரு போர் பாசறையில் தங்கியிருந்த மன்னனின் காதில் ஒரு பூச்சி நுழைந்து விட்டது. திடுக்கிட்டு எழுந்தான். காதில் இருந்த பூச்சியை எடுக்க மன்னனைச் சுற்றியிருந்தவர்கள் படாத பாடுபட்டார்கள்.

    அவர்கள் முயற்சி எதுவும் பலிக்கவில்லை. சில வீரர்களை அழைத்துக்கொண்டு தலைநகரத்திற்குத் திரும்பினான் மன்னன். ராஜ வைத்தியரிடம் பிரச்சினையைச் சொன்னான். அவரும் எவ்வளவோ பாடுபட்டார். தொலைதூரத்தில் இருந்து மூலிகைகள் வரவழைக்கப் பட்டன.

    மூலிகையைப் பிழிந்து சாறு எடுத்து மன்னனின் காதிற்குள் விட்டார்கள். எதற்கும் பலன் இல்லை. மன்னனின் பிரச்சினையைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பிரமாண்டமான பரிசுகள் அறிவிக்கப்பட்டன.

    எங்கிருந்தெல்லாமோ வைத்தியர்கள் வந்தார்கள். யாராலும் அந்தப் பூச்சியை வெளியே எடுக்க முடியவில்லை. மன்னனின் காதிற்குள் அந்தப் பூச்சி அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்ததால், அவனால் தூங்க முடியவில்லை. உணவும் குறைந்து விட்டது. மன்னன் பொலிவு இழந்தான்.

    கம்பீரமாக உலா வந்து கொண்டிருந்தவன், இப்போது பஞ்சத்தில் அடிபட்டவனைப் போல் காணப்பட்டான். எந்த நேரமும் படுக்கையிலேயே இருந்தான். தன்னுடைய முடிவு நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்தான்.

    பதினான்கே வயதான அவனுடைய மூத்த மகனுக்கு அவசர கதியில் வாள் பயிற்சி, குதிரையேற்றம் எல்லாம் கற்பிக்கப்பட்டது.

    இந்த நேரத்தில் இமயமலையில் இருந்து ஒரு துறவி சீடர்கள் புடை சூழ நாட்டிற்கு வந்திருப்பதாக செய்திகள் வந்தன. பட்டத்து ராணி அந்தத் துறவியைப் பார்க்கப் போனாள். அவருடைய காலில் விழுந்து கதறினாள். தன் கணவனைக் காப்பாற்ற வேண்டும் என்று மன்றாடினாள்.

    அரண்மனைக்கு வந்து சேர்ந்தார் துறவி. மன்னனின் காதை நன்றாகப் பரிசோதித்தார். ராஜ வைத்தியருடன் கலந்தாலோசித்தார்.

    பின் சிறிதுநேரம் தியானத்தில் ஆழ்ந்தார். அன்று மாலை அரசனையும், அரசியையும் தனியாகச் சந்தித்துப் பேசினார். ‘இது மிகவும் அபூர்வ வகை பூச்சி அரசே. நம் பக்கத்து மூலிகைகளுக்கு இது கட்டுப்படாது. இங்கிருந்து நூறு யோஜனை தூரத்தில் உள்ள ஒரு காட்டில் விளையும் அபூர்வமான ஒரு மூலிகைக்குத் தான் இந்தப் பூச்சி கட்டுப்படும். இன்றே என் சீடர்களை அனுப்புகிறேன். எப்படியும் ஒரு மாத காலத்திற்குள் அவர்கள் திரும்பி வந்துவிடுவார்கள். அதன்பின் உங்கள் பிரச்சினை முற்றிலுமாகத் தீர்ந்துவிடும்’ என்றார்.

    மேலும் அந்த மூலிகையை எப்படி இனம் கண்டுகொள்ள வேண்டும் என்று விளக்கிச் சொல்லி, தன் சீடர்களில் சிறந்தவர்கள் இருவரை அனுப்பி வைத்தார் துறவி.

    அவர்களுக்குக் குதிரையேற்றம் தெரியும் என்பதால், அவர்களது பயணத்திற்குச் சிறந்த அரேபிய குதிரைகளைக் கொடுத்து அனுப்பினான் மன்னன். கூடவே, அவர்கள் பாதுகாப்பிற்காகச் சில வாளேந்திய வீரர்களையும் அனுப்பி வைத்தான்.

    மூன்றே வாரங்களில் சீடர்கள் மூலிகையுடன் வந்தார்கள். அது ‘ராஜ மூலிகை' என்பதால் அதை வைத்து ஒரு நாள் முழுவதும் பூஜை செய்யவேண்டும் என்று துறவி சொல்லி விட்டார்.

    மறுநாள் காலை விடிவதற்கு முன்னால், பிரம்ம முகூர்த்த நேரத்தில் மன்னனின் காதில் அந்த மூலிகையில் இருந்து சாறு எடுத்து ஊற்றப்பட்டது.

    அடுத்த சில நொடிகளில் பூச்சி, வெளியில் வந்து விழுந்தது. மன்னனிடம் அந்தப் பூச்சியைக் காட்டினார் துறவி. தன்னைக் காப்பாற்றிய துறவியின் கால்களில் விழுந்து வணங்கினான் மன்னன். சில நாட்கள் அரண்மனையில் தங்கியிருந்தார் துறவி.

    மன்னன் இப்போது நிம்மதியாகத் தூங்கினான். நன்றாக உண்டான். பழைய பொலிவு திரும்பி விட்டது. துறவி விடைபெற்றுக்கொண்டார்.

    அவருக்கும் அவரது சீடர்களுக்கும் உரிய மரியாதை செய்து அனுப்பி வைத்தான் மன்னன். அவர்கள் நாட்டு எல்லையைத் தாண்டியதும், துறவியின் சீடர்களில் ஒருவன் கேட்டான்.

    “குருதேவா! அந்த அற்புதமான மூலிகை பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்!''

    மற்றொரு சீடனின் கேள்வி வேறு விதமாக இருந்தது. “மூலிகையை விட அந்தப் பூச்சி இன்னும் அற்புதமாகத் தோன்றுகிறது. ஒரு மனிதனின் காதிற்குள் புகுந்து அத்தனை நாள் உயிருடன் இருந்து அவனைப் பாடாய்ப் படுத்தி வைத்தது என்றால், அது மிகவும் விசேஷமான பூச்சியாக இருக்க வேண்டும். அதைப் பற்றிச் சொல்லுங்களேன்.”

    துறவி புன்னகை பூத்தார். “பூச்சி அத்தனை நாள் எங்கே இருந்தது என்று நினைக்கிறீர்கள்?'' என்று சீடர்களைப் பார்த்துக் கேட்டார்.

    “மன்னனின் செவிக்குள்'' என்று பதிலளித்தனர் சீடர்கள்.

    துறவி இப்போது சொன்னார். “அது தான் இல்லை. மன்னனின் காதிற்குள் பூச்சி போனது உண்மையாக இருந்திருக்கலாம். சிறிது நேரத்திலேயே அது செத்திருக்கும். இல்லை வெளியே வந்திருக்கும்.

    அந்தச் சிறிது நேரத்தில் அது மன்னனின் செவிகளுக்குள் ஒரு குறுகுறுப்பு உணர்வை ஏற்படுத்திவிட்டது. அது மன்னனின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அந்தப் பூச்சி காதுக்குள் உயிருடன் இருப்பதாகவே இதுநாள் வரையில் மன்னன் நினைத்துக் கொண்டிருந்தான்” என்றார்.

    “குருதேவா! அதை விளக்கிச் சொல்லி, மன்னனை குணப்படுத்தி இருக்கலாமே?'' என்றான் சீடர்களின் ஒருவன்.

    “மனோ வியாதியை அப்படி எளிதாகக் குணப்படுத்திவிட முடியாது! பிரச்சினை தீவிரமானது என்று மன்னன் நினைத்துக் கொண்டிருந்தான். அதனால் தான் நானும் சிகிச்சை தீவிரமானது என்று பாசாங்கு செய்தேன். தொலைதூரத்தில் இருந்து மூலிகை வர வேண்டும் என்று பொய் சொன்னேன். நான் கொண்டு வரச் சொன்னது, நம் ஊரில் சாதாரணமாக விளையும் தூதுவளை தான். அதை யாரும் கவனிக்காமல் பார்த்துக் கொண்டேன். பின் ஒருநாள் பூஜை செய்து காலை இருட்டு நேரத்தில் மூலிகைச் சாற்றை மன்னனின் காதில் விட்டு, ஏற்கனவே பிடித்து வைத்திருந்த ஒரு செத்த பூச்சியைக் காட்டினேன். மன்னன் நம்பி விட்டான். அவன் நோயும் தீர்ந்தது” என்றார் துறவி.

    சீடர்கள் வியப்புத் தாளாமல் தங்கள் குருவைப் பார்த்தார்கள்.

    இந்தக் கதை நமக்கு ஒரு செய்தியைக் கூறுகிறது. மன்னனுக்கு ஏற்பட்டதைப் போலவே, இன்று மனிதர்களை தாக்கும் நோய்களில் பெரும்பான்மையானவை, அவர்களின் மனங்களில் தான் இருக்கின்றன.

    மன்னனின் காதில் நுழைந்த பூச்சி, எப்போதோ அகன்று விட்டது. அவனது மனதில் நுழைந்த பூச்சிதான் அவனை வாட்டி வதைத்தது.

    நம்மில் பலரும் கூட சூழ்நிலையைக் காரணம் காட்டி, தங்களது வாழ்க்கையை தாமே கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இல்லாத ஒரு பிரச்சினையை, இருப்பதாக நினைத்துக் கொண்டு நமக்கான வெற்றிகளை நாம் இழந்து கொண்டிருக்கிறோம்.
    Next Story
    ×