search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கஜேந்திர மோட்ச திருவிழா
    X

    கஜேந்திர மோட்ச திருவிழா

    திருமோகூர் காளமேக பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்ச திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    முற்பிறப்பில் சிறந்த விஷ்ணு பக்தராக வாழ்ந்த மன்னன் கஜேந்திரன் அகத்திய முனிவரின் சாபத்தால் கஜேந்திரன் எனும் யானையாக பிறந்தார். முனிவர் தேவலாவின் சாபத்தால் கந்தர்வன் ஒருவன் முதலையாக பிறந்தார். இருவருக்கும் சாப விமோசனமளிக்க பெருமாள் வந்தருள்வார் என்று முனிவர்கள் வரமளித்தனர்.

    அதன்படி இருவரும் திரிகூடமலையில் வசித்தனர். தாகம் தணிக்க யானை தனது கூட்டத்துடன் குளத்திற்கு வந்தது. அப்போது அங்கிருந்த கந்தர்வனான முதலை கஜேந்திர யானையின் காலை கவ்விப் பிடித்தது, மற்ற யானைகள் எவ்வளவு முயன்றும் முதலையிடமிருந்து யானையை காப்பற்ற முடியவில்லை, முதலையும் யானையின் காலை விடுவதாக தெரியவில்லை, தனது இறுதிகாலம் நெருங்குவதாக உணர்ந்த கஜேந்திரன் யானை துதிக்கையால் குளத்திலுள்ள தாமரையை பற்றி வானை நோக்கி ஆதிமூலமே என பெருமாளை வேண்டி பிளிரி சரணாகதி அடைந்தது.

    தனது பக்தனின்(யானை) துயர் துடைக்க வானில் கருட வாகனத்தில் தோன்றிய பெருமாள் தனது சக்ராயுதத்தை ஏவி முதலையின் தலையை துண்டித்து யானையை காப்பாற்றி மோட்சம் அளித்ததாக புராணங்கள் கூறுகின்றன.

    இந்த புராணத்தை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் காளமேக பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்ச திருவிழா நடைபெறும். நேற்று அதிகாலையில் நரசிங்கம் கோவில் முன்பு அமைந்துள்ள குளக்கரையில் கருட வாகனத்தில் எழுந்தருளிய வழித்துணை பெருமாள் முன்பு யானையின் காலை கவ்வும் முதலை பொம்மைகளை வைத்து கஜேந்திர மோட்ச நிகழ்ச்சி நடைபெற்றது.

    Next Story
    ×